Thursday 19 June 2014

Story 17: பேரு மாறுன கத

பேரு மாறுன கத:

முத்தம்மா கெழவிக்கு வயசு அறுபது இருக்கும், ஆனா உருவத்துல அவ்ளோ காணாது. நல்ல ஆகிருதியான திரேகம். ரங்கையா நாக்கிரு காட்டுக்கு போற வழில தான் அதோட கேணியும் கொஞ்சூண்டு நெலமும் இருக்கு.. கேணிக்கு அந்த பக்கம் ரங்கையா நெலத்துக்கு பக்கத்துல பிள்ளமாருகளோட குல தெய்வம் கோவில் ஒண்ணு இருக்கு. கோவிலுக்குனு பொது வழி எல்லாம் ஒண்ணும் இல்ல, கெழவி நெலத்தையும், ரங்கையா நாக்கிரு நெலத்துலயும் பொழங்கிகராங்க.
கோயிலுக்குன்னு தனி நிலம் வேணும்கிறது பிள்ளமாருகளோட ரொம்ப நாள் ஆச, சம்பந்தப்பட்டவகள போயி கேக்கறப்ப, ரங்கையா நெலத்த மனசோட குடுத்தர்ராறு நல்ல காரியந்தானனு.. ஆனா முத்தம்மா முறிக்கிகிட்டு நிக்கறா. அதனால பஞ்சாயத்து ஆகிப் போச்சு.

ஏப்பா, அதிக எடம் என்னது, கோயில் காரியமாச்சேனு நானே குடுத்துட்டேன், எரும சாணி போட்டா அது  எடம் நெறஞ்சு போகும், அதக் குடுக்க கெழவிக்கு எங்க வலிக்குதுன்னு நாக்கிரு கேக்க

கெழவி தன் ஞாயத்த சொல்லுது.. என் புருஷன் இப்பவோ அப்பவோன்னு இழுத்துகிட்டு கெடக்குது, அது செத்தா அங்க தான் பொதக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கு, அத தன் புருஷனோட கடைசி ஆசையவாச்சும் செஞ்சு போடோனும்ங்குது.

கோயிலுக்கு பக்கத்துல சாவு காரியம் பண்ணகூடாது, இது சம்பிரதாயம், ஏன் கெழவிக்கு சுடுகாடு இல்லையாம்வானு பிள்ளமாருக ஒரு பக்கம் குதிக்கறாங்க..

என் நெலத்துல நான் என்ன வேண்ணா செய்வேன், உங்க சோலி மசுரப் பாருங்கயானு கெழவி மல்லு கட்ட,

பஞ்சாயத்துக்கு வந்த பெருசுகளுக்கு மண்ட காஞ்சு போச்சு.

பஞ்சாயத்து இந்த மேனிக்கி போக, எந்திரிச்சு வந்துட்டாரப்பா உள்ளூர் வாத்தி மொண்டிக்கால் ராமசாமி நாக்கிரு. கால் அவருக்கு ஊனம், அதனால அந்த பேரு ஆகிப் போச்சு. பொடிமட்டய்ல இருந்து பொடிய எடுத்து சர்ருன்னு உறிஞ்சுனாறு, உறிஞ்ச பொடி  எப்புடியும் உள்மூல வரைக்கும் போயிருக்கும். சாவகாசம, கைய பக்கத்துல இருந்த மரத்துல தேச்சுகிட்டே முன்னாடி வந்தாரு.,

ஆனா மனுஷன் ரொம்ப நக்கலான ஆளுங்க. இப்படி தான் ஒருக்கா என்ன ஆச்சு, ஊருக்குள்ள அமாவாசை பூச, வழக்கம் போல பூச பண்ண மணி அய்யரு வந்தாரு, பாவம் மனுஷன் கோமணத்த மறந்துட்டாரா இல்ல வெறுத்துட்டாரானு தெரியல.. வேட்டிய  மடிச்சு கட்டிக்கிட்டு, மணியடிச்சு பூச பண்ணிகிட்டு இருந்தாருகீழ நின்னுகிட்டு இருந்த நம்ம மொண்டி வாத்தியாரு,
ஏய்யா மணி, அது என்னய்யா மேலயும் மணி ஆட்டர, கீழையும் ஆட்டர னு கேட்டு புட்டாரு.. பொம்பளக புள்ளகனு எல்லாரும் சிரிச்சு புட்டாங்க.. பாவம் அய்யருக்கு பெருத்த அவமானம் ஆயிப்போச்சு...

இன்னொரு சம்பவம், கந்துகட நாக்கிருக்கும், மிலிட்டரிக்கும்  வாக்குவாதம், நெறைய ஆளுக வந்து பைசல் பண்ற அளவுக்கு ஆகிப் போச்சு. பிற்பாடு வாத்திகிட்ட வந்து மிலிட்டிரி பிராது சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு. அப்டியே பேச்சுவாக்குல, அவன சும்மா விடமாட்டேன், சும்மா விடமாட்டேன்னு மிலிட்டிரி திருப்பி திருப்பி சொல்ல, வாத்தி நக்கலா சரி சொல்லிட்டு தான் போய் உடேன்னு நக்கலக் குடுத்தவரு

வந்த மனுஷன் இப்டி ஆரம்பிச்சிருக்காப்ள, உன் புருஷந்தான் சாகர ஆளா? அவன் உன்னயெல்லாம் மேல  அனுப்ச்சு வெச்சுட்டு அப்புறம் தான் போய் சேருவான், இத்தன பேரு சொல்றோம் குடுன்னா குடுக்க வேண்டியதுதான்னு அதிகாரமா சொல்ல, கெழவிக்கு கோவம் வந்திரிச்சு,  
ஏண்டா வாத்தி, உனக்கென்ன, உக்காந்த எடத்துலயே குண்டி குளிர சம்பளம், அதுவும் கவர்மெண்டு தருது, நீ ஏன் பேச மாட்டன்னு சத்தம் போடுது.
இப்போ இதுக்கு என்னதான் தீர்வுன்னு ரங்கையா நாக்கிரு கேக்க,
கெழவி பிடிவாதமா கோயிலுக்கு வேற வழி பாத்துக்கங்க, என் புருஷன என் நெலத்த விட்டுட்டு வேற எங்க பொதக்கிறதுன்னு முடிவா சொல்லிருச்சு.

சடார்னு எந்திரிச்சாரு மொண்டிக்கால் ராமசாமி நாக்கிரு, செத்தாப் பொணத்த தூக்கி அமராவதி ஆத்துல எறி, இப்போ நெலத்த எழுதிக் குடுன்னு கேட்டு புட்டாரு.
கெழவிக்கு வந்துச்சு பாருங்க ஆத்திரம், குடுகுடுன்னு கொமரியாட்டம் ஓடியார்ரா வாத்தியப் பாத்து,
கெழவி தான என்ன செஞ்சுரப் போறான்னு வாத்தி தெனாவெட்டா நிக்கறாரு. கிட்ட வந்த கெழவிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. வெறி வந்தவளாட்டம் என்னடா வாத்தி சொன்னனு கேக்கறா...
என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம லேசாச் சிரிச்சாரு வாத்திநெலம புரியாம பாவம்.

அவ்ளோதான், எங்கிருந்துதான் அப்பிடி ஒரு ஆவேசம் வந்துச்சோ கெழவிக்கு, லப்புன்னு பிடிச்சிட்டா வாத்தியோட கொட்டைய.  ஒரு நிமிஷம் என்ன நடக்குதுனே யாருக்கும் புரியல.. பேயறஞ்ச மாறி இருக்காங்க எல்லாரும்,
வாத்தி நெலமைய சொல்லவே வேணாம், மனுஷன் கத்திக் கூச்சல் போடறாரு, கெடா வெட்டும் போது ஆடு கடசியா ஒரு சத்தம் போடும்ல அதே மாறி அலர்றாரு..

நிலவரம் வெளங்கிருச்சு பெருசுகளுக்கு, ஏய் விடுன்னு கத்திகிட்டே ஒடியாந்தாரு ரங்கையா நாக்கிரு,
ஒரு வழியா கெழவி பிடிய விட்டுச்சு. வாத்தி வெட்ன வாழ மரமா பொத்துனு விழுகறாரு.. பாவம் ஒரு வாரத்திக்கி அழுதுகிட்டே இருந்திருக்காரு.

பஞ்சாயத்தும் அத்தோட கலஞ்சிருச்சு. அந்த எடப் பிரச்சன என்னாச்சுனு தெரியல, ஆனா இப்பெல்லாம் நம்ம மொண்டி வாத்தியாரு கால கொஞ்சம் அகட்டி அகட்டி தான் நடக்கராறு. அவரு பேரும்  மொண்டி கால் ராமசாமி நாயக்கர்ன்கிரது போயி, கவட்டக்கால் நாக்கிருனு ஆகிப் போச்சு.

முத்தம்மா புருஷன் இன்னும் உயிரோட தான் இருக்கான்.
 


No comments:

Post a Comment