Tuesday 24 June 2014

Story 27: மாறுதல்!


மாறுதல்!

நகரத்தின் பரபரப்புக்கள் எதுவுமின்றி இருந்தது அந்த தெரு. தெரு முனையில் இருளோடி இருந்தது அந்த வீடு. வீட்டின் வெளியே சிறிதாய் ஒரு தோட்டம் இருந்தது. வீட்டினுள் ஹாலில் ஒரு சாய்வு நாற்காலியில் கண்களில் கண்ணீர் தேங்கியபடி கைகளை தலைக்கு வாகாக வைத்து சாய்ந்து கொண்டிருந்தார் ஒரு அறுபது வயது மனிதர்!

பாலாஜி காலனி. இருபது வருடங்களுக்கு முன் மத்திய வர்க்கத்தினரால் எளிதாய் வாழக்கூடிய இடமாய் திகழ்ந்தது. அங்கே இருந்தவர்களில் கால்வாசி பேர் தான் வீட்டு ஒனேர்கள், அதுவும் சிறுகு சிறுகாய் கட்டப்பட்ட பொட்டி சைஸ் வீடுகள். அதனாலேயே அங்கே நிரந்தர வேலை இருந்தாலே எளிதான நிறைவான வாழ்வை வாழ முடிந்தது. சிறுவர்கள் சாலை எங்கும் சுற்றி திரிந்து ஹவர் சைக்கிள் வாங்கி ஓட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். சனி ஞாயிறுகளில் கிரிகெட். சாலையில் மூன்று குச்சிகளை நட்டு வைத்து டென்னிஸ் பந்தில் விளையாடுவார்கள். சரியான குச்சி கிடைக்காத அன்று செங்கல் வைப்பது வழக்கம். அவர்களின் ரூல்ஸ் ICCயில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. பந்து எங்கும் குத்தாமல் நேராக எதாவது வீட்டிற்க்குள் விழுந்தால் அவுட். இப்படி பற்பல புதுமைகள் அவர்கள் ஆட்டத்தில் இருந்தது. அப்படி ஒரு நாள் ஆடும் போது பந்து பல முறை சாலையை ஒட்டி இருந்த ஒரு வீட்டில் விழுந்தது. அந்த வீட்டில் இருப்பவர்கள் அத்தனை முறையும் எச்சரித்தனர். சிறுவர்கள் கேட்கவில்லை.

ஆனந்த் எறிந்த பந்தை ராகேஷ் தூக்கி அடித்தான். பந்து பறந்தது. ஒரு மாடி வீட்டின் ஜன்னலை நோக்கி பந்து சென்றது. டமால்! சிறுவர்கள் கலைந்து ஓடினர். மாடி வீட்டுக்காரர் இறங்கி வந்து சத்தம் போட ஆரம்பித்தார். ஒரு சிறிய கூட்டம் கூடியது. காலனி சிறிது என்பதால் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகம் இருந்தது. கண்ணாடி உடைத்த வீரர்களின் பெற்றோர்கள் அந்த கூட்டத்தில் ஐக்கியம் ஆனார்கள். மாடி வீட்டுக்காரர் கொஞ்சம் அத்து மீறி பேசியது போல தோன்ற ஆரம்பித்தவுடன் பெற்றோர்கள் கண்ணாடிக்கு காசு தந்து விடுவதாக கூறினர். பின் மாடி வீட்டுக்காரரை சிறுவர்களை கன்டபடி திட்டியதற்கு கண்டித்தனர். எல்லாம் முடிந்து எல்லோரும் கிளம்பும் சமயம் "அப்பா அடிக்காதீங்க அப்பா. இனிமேல் ரோட்ல  கிரிகெட் ஆட மாட்டேன்ப்பா" என்று ஒரு சிறுவன் அலறும் சத்தம் கேட்டது.

 

"எத்தனை வாட்டி உனக்கு சொல்றது. சோறு தான தின்ற?" என்று அந்த சிறுவனின் தந்தை ஒரு நீளமான குச்சியை வைத்து அவனை சரமாரியாக அடித்தார்.

அந்த சிறுவன் பந்தை மேலே பறக்க விட்ட ராகேஷ். அடித்தவர் ராகேஷின் தந்தை சம்பத். முக்கு வீட்டில் இருந்த அறுபது வயது நெருங்கிய  மனிதரின் முப்பத்தி எட்டு அல்லது நாற்பது வயது தோற்றத்துடன் காணப்பட்டார் சம்பத். ராகேஷ் சம்பத்தை உரித்து வைத்திருந்தாலும் நிறம் அவன் தாய் லதாவை போல்!

சம்பத் அடிப்பதை பார்த்து சுற்றி இருந்தவர்கள் மிரண்டு போனார்கள். அவனை தடுக்க போனால் எங்கே அவர்களுக்கும் ஏசு விழுமோ என்ற பயத்தில் யாரும் சம்பத்தை தடுக்கவில்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை உணர்ந்த பின் சிலர் சம்பத்தை பிடித்துக்கொண்டனர். அவர்கள் எடுத்த முடிவை எடுத்து கூறி அவனையும் கண்ணாடி வாங்க காசு தருமாறு கூறினர். அப்போது அங்கே ஒரு இருப்பதி எட்டு வயது இளைஞன் சம்பத்தை கைகள் நீட்டி திட்டினான்.

"யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல? மத்தவங்க எல்லாரும் அவங்க புள்ளைங்கள எப்படி காப்பாத்துறாங்க? நீயோ தான் இருக்கியே? மாடு மாதிரி அடிசிக்குட்டு."

கூட்டம் கலைந்தது. ராகேஷ் வீட்டிற்க்கு வந்தான். அன்று முழுவதும் அழுதான். அவன் அம்மாவிடம் முறையிட்டான்.

"ஏம்மா அப்பா என்ன இப்படி அடிக்கிறாரு? மத்த பசங்க அப்பா எல்லாம் கண்ணாடி ஒடச்சதுக்கு அடிக்கவே இல்லையே?"

"விடு ராக்கி. நம்ம அப்பா தான அடிச்சாரு. இனிமேல் ரோட்ல எல்லாம் கிரிக்கெட் ஆடக்கூடாது. என்ன?"

"செரி மா. நான் ஆட மாட்டேன். அப்பா கிட்ட இனிமேல் அடிக்க வேணாம்ன்னு சொல்லும்மா."

"கண்டிப்பா சொல்றேன்."

"டேய்", சம்பத்தின் அதட்டல் கேட்டதும் ராகேஷ் சத்தமில்லாமல் அவன் அறைக்குள் புகுந்தான்.

அதன் பின் ராகேஷ் சம்பத்திடம் மாதம் ஒரு முறையேனும் அடி வாங்காமல் இருக்கவில்லை. பரிட்சையில் மதிப்பெண் குறைவாய் வாங்கியதற்கு ஒரு முறை, கடையில் கொடுத்த மீதி சில்லறையில் சாக்லேட் வாங்கியதற்கு, ஸ்கூல் பன்க்ஷனில் டான்ஸ் ஆட சேர்ந்ததற்கு, பாட புத்தகத்தின் உள்ளே பாட்டு புத்தகம் வைத்ததற்கு, நண்பனுடன் படம் பார்க்க அனுமதி கேட்டதற்கு, இத்யாதி இத்யாதி. ஒவ்வொரு முறையும் அடியின் வீரியம் கூடிக்கொண்டே போனது. ஒவ்வொரு முறையும் யாராவது தடுக்கும் வரை சம்பத் அடிப்பான்.

ஒரு கட்டத்திற்கு பிறகு ராகேஷிற்க்கு அடி மறுத்துவிட்டது, மனதிலும் உடலிலும். அவன் பள்ளியை முடித்தான். அவனுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர ஆசை. ஆனால் சம்பத்தோ மெகெனிகல் தான் எடுத்தாக வேண்டும் என்று விடபிடியாய் இருந்தான். அப்படி மெகெனிகல் படித்தால் தான் அவன் படிப்பின் முழு செலவையும் பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டான். சம்பத்தை பொறுத்த வரை மெகெனிகலிற்கு தான் என்றும் மவுசு. எப்படியும் பிழைத்து கொள்ளலாம் என்ற எண்ணம். வேறு வழியின்றி ராகேஷ் சம்மதித்தான்.

ராகேஷ் விரும்பி எடுக்காவிட்டாலும் மெகெனிகல் அவனை ஈர்த்திருந்தது. ஈடுப்பாடோடு படித்தான். அவன் தந்தை அவனை அடிப்பதற்கான எந்த வாய்ப்பையும் அவன் கல்லூரி சேர்ந்த முதல் வருடம் அமைத்து தரவில்லை.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள் சம்பத்திற்கு ஒரு போன் வந்தது.

"நாங்க சைதாபேட்டை போலிஸ் ஸ்டேஷேன்ல இருந்து பேசறோம். உங்க பையனையும் அவன் பிரெண்ட்சையும் ட்ரன்க் அண்ட் டிரைவ்ல பிடிச்சு வச்சிருக்கோம். வந்தீங்கன்னா ஒரு வார்னிங் குடுத்து அனுப்பிடலாம்."

சம்பத்திற்கு கோவம் தலைக்கேறியது. உடனே விரைந்தான்!

போலிஸ் ஸ்டேஷனில் அசாத்திய பொறுமையுடன் இருந்தான் சம்பத். கையெழுத்திட்டு ராகேஷை வண்டியில் ஏற்றினான். ராகேஷ் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது.

"அப்பா நான் சத்தியமா குடிக்கலப்பா. ப்ளீஸ் என்ன நம்புங்க", என்று வழியெல்லாம் சொல்லி கொண்டே வந்தான்.

சம்பத் ஒரு வார்த்தை பேசவில்லை. காலனி உள்ளே நுழைந்ததும் சம்பத் வண்டியை வீட்டின் வெளியே அவசர அவசரமாக பார்க் செய்தான். ராகேஷ் கேட்டய் திறந்ததும் அவன் கழுத்தில் மொட்டேல் என்று சம்பத் ஒன்று வைத்தான். அதன் பின் சரமாரியாக அவனை வீடு வரை அடித்துக்கொண்டே சென்றான். ஒவ்வொரு முறையும் "இந்த வயசுல குடிக்கிரியாடா ராஸ்கல்" என்று கூறிக்கொண்டே அடித்தான். ராகேஷ் தான் குடிக்கவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அது சம்பத் காதுகளுக்கு போய் சேரவில்லை.

லதா எவ்வளவு தடுத்தும் சம்பத் அடிப்பதை நிறுத்தவில்லை. "வளர்ந்திருக்கு பாரு பொறிக்கி மாதிரி" என்று வீட்டிற்க்குள் தள்ளினான். அப்போது அந்த இளைஞன் வாசலில் நின்று சம்பத்தை நோக்கி திட்டினான்...அதே பதினெட்டு வயதில் தான் இன்னும் இருந்தான் அந்த இளைஞன்.

"யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல? எவனோ போலீஸ்க்காரன் சும்மா குடிசிருக்கான்னு சொன்னா நம்புவ, சத்தியம் பண்ணி குடிக்கலன்னு சொல்றவன நம்ப மாட்ட? நீயெல்லாம்...சீ!"

ராகேஷ் மிகுந்த மன உளைச்சலோடு அவன் அம்மாவிடம் சென்று விசும்பி அழுதுக்கொண்டே பேசினான்.

"நான் நெசமா குடிக்கலம்மா. நீ கூட  நம்ப மாட்டியா?"

சம்பதிற்கு கோவம் முழுதாய் தணியவில்லை.

"தோளுக்கு மேல வளர்ந்த பையன இப்படி போட்டு அடிக்கீறேன்களே, உங்களுக்கே இது நல்லாயிருக்கா?", லதா ஆரம்பித்தாள்.

" அடிக்கிறதா? கொல்லனும் இவன? இதுல நீ வேற சப்போட்டு? கண்டிக்காம வளர்த்தா நாசமா போயிடுவான். எத்தன பெற பாக்குறேன்!"

ராகேஷிற்க்கு இப்படி கேட்கும் போதெல்லாம் ஏதேனும் தவறு செய்ய வேண்டும் என்றே தோன்றும். இருந்தும் அதற்க்கான சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் ஏதோ ஒரு பயம் அவனை தடுத்திடுவிடும். ராகேஷ் சம்பத்திடம் அதன் பின் அவ்வளவாக பேசிக்கொள்ளவில்லை. கல்லூரியை முடித்தவுடன் அவனுக்கு வேலை கிடைத்தது. வேலைக்கு தினம் வீட்டில் இருந்தே செல்வான். சம்பளம் முழுதும் அம்மாவிடமே கொடுப்பான். அவள் சம்பத்திடம் நேராக கொடுக்க சொல்லும்போதெல்லாம் அவளையே கொடுக்க சொல்லி விடுவான்.

இப்படி மூன்று வருடங்கள் ஓடியது. ராகேஷிற்க்கு இருபத்தி எட்டு வயதை தொட்டது. சம்பத் ராகேஷின் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்ய மும்முரமாய் இருந்தான். ஒரு நாள் சம்பத் அவர்களுக்குள் இருந்த பனி போரையும் மீறி ராகேஷிடம் ஒரு பெண்ணை பார்க்க அவனை அழைத்தான். ராகேஷ் பதில் எதுவும் சொல்லவில்லை.

"டேய் நான் உன் கிட்ட தான் சொல்றேன். நான் நாளைக்கு வரம்ன்னு வாக்கு குடுத்துட்டேன். போயி ஷேவ் எல்லாம் பண்ணி ரெடியா இரு."

"நீங்க ஒன்னும் எனக்கு பொண்ணு பாக்க வேணாம்."

"அப்போ யாரு பார்ப்பா?"

"அதெல்லாம் நானே பாத்தாச்சு."

"என்னது நீயே பாத்துட்டியா? அடி செருப்பால நாயே! என்ன சம்பாதிக்கிரோம்ன்னு ஏத்தமா. அடி கொன்னுபுடுவேன்."

"கொல்லுவீங்க கொல்லுவீங்க...அம்மா கிட்ட நான் எல்லாமே சொல்லிட்டேன். அவங்க சம்மதம் எனக்கு போதும்."

"என்னடி இது. எல்லாரும் நாடகம் ஆடுறீங்களா? ", என்று லதாவை பார்த்து சம்பத் கேட்டான்.

 

"இல்ல நானே மெதுவா உங்க கிட்ட...." , லதா இழுத்து சொல்ல ஆரம்பிக்கையில்....

"ஏன்மா தயங்குற. பொண்ணு வீட்லயும் சம்மதிச்சுட்டாங்க..இவர் சம்மதம் எனக்கு ஒன்னும் முக்கியம் இல்ல."

சம்பத் உடனே ராகேஷை அடிக்க கையை ஓங்கினார். ராகேஷ் உடனே அதை தடுத்து நிறுத்தினான்.

"யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல. இவ்வளவு பெரிய பையன அடிக்க வர...தடுத்ததோட நிறுத்திட்டேன்னு சந்தோஷ பட்டுக்கோ. இத நான் காலேஜ் படிச்சபோவே செஞ்சிருக்கணும். எதோ அப்பான்னு கொஞ்சம் அப்போ ஓட்டிட்டு இருந்ததால விட்டுட்டேன். இனிமேல் மேல கைய வெக்க நினைச்சே யோசிக்காம எதாவது பண்ணிடுவேன். என் கல்யாணம் நடக்கும். நீ வந்தாலும் செரி வராம போனாலும் செரி."

ராகேஷின் அன்றைய கோவம் சம்பத்திற்கு புதிது. ஒரு வார்த்தை கூட அவனால் அதற்க்கு பேச இயலவில்லை. அந்த காட்சி சம்பத்தின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

இந்த சம்பவம் நடந்து ரெண்டு வருடங்களுக்கு பின் ராகேஷிற்க்கு அவன் விரும்பிய பெண்ணுடன் கல்யாணமாகி இருந்தது. சம்பத் நித்தம் அந்த சாய்வு  நாற்காலியில் உட்கார்ந்து கலங்கி கொண்டிருந்தான். அவனுக்கு ராகேஷின் அன்றைய எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் கண்டிப்பு என்கிற போர்வையில் பாசத்தை கடைசி வரை மறைத்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.

பின்னொரு நாள் சம்பத் தன் மனைவியிடம் வேதனையோடு கூறிக்கொண்டிருந்தான்.

"அன்னிக்கி நான் அடிக்க போனப்ப என் கைய தடுத்து என்ன நாக்கு பிடிங்கிக்கிற மாதிரி கேட்டானே ஞாபகம் இருக்கா? நான் அதுக்கு முன்னாடி அவன அடிச்ச ஒவ்வொரு வாட்டியும் அவன் என்ன அப்படி கேக்குற மாதிரியே எனக்கு தோணுதுடி."

 

["யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல? மத்தவங்க எல்லாரும் அவங்க புள்ளைங்கள எப்படி காப்பாத்துறாங்க? நீயோ………”

"யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல? எவனோ போலீஸ்க்காரன் சும்மா குடிசிருக்கான்னு சொன்னா நம்புவ, சத்தியம் பண்ணி…………”

"யோவ் உனக்கெல்லாம் அறிவில்ல. இவ்வளவு பெரிய பையன அடிக்க வர...தடுத்ததோட நிறுத்திட்டேன்னு சந்தோஷ பட்டுக்கோ. இத நான் காலேஜ் படிச்சபோவே செஞ்சிருக்கணும். எதோ அப்பான்னு கொஞ்சம் அப்போ ஓட்டிட்டு இருந்ததால…………………..”]

"ச்சே ஏன் கண்டதெல்லாம் நெனச்சுக்கிட்டு...இந்தாங்க மாத்திரைய சாப்ட்டு தூங்குங்க. எதாவது நெனச்சுக்கிட்டே இருக்காதீங்க."

சற்று யோசனைக்கு பின் மீண்டும் தொடர்ந்தார்.

"ராகேஷ் நல்லா இருக்கான்ல ?"

லதா அமைதியாய் தலையசைத்தாள்.

"உன் கிட்ட பேசுறானா?"

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

"அவன் அடுத்த வாட்டி போன் பண்ணும்போது என் கிட்ட குடு. நான் எதுவும் பேச மாட்டேன். அவன் குரல மட்டும் கேட்டுகிறேன்."

லதா கண்களும் கலங்கியது.

சாப்ட்வேர் கம்பனிகள் அதிகம் இருக்கும் அந்த பகுதியில் இருந்த ஒரு அப்பார்ட்மென்டில் ராகேஷும் அவன் மனைவி சரண்யாவும் குடி இருந்தார்கள். இருவரும் வேலையை முடித்து அதீத கலைப்பில் வீட்டிற்க்குள் நுழைந்தார்கள். கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு இருவரும் சிறிது நேரம் டிவி பார்த்தார்கள். பின் மெல்ல சரண்யா ராகேஷிடம் ஆரம்பித்தாள்.

"உன் அம்மா இன்னிக்கு எனக்கு கூப்ட்டிருந்தாங்க."

"எதாவது முக்கியமான விஷயமா?"

"உன் அப்பாக்கு கொஞ்சம் முடியலாம்"

"" என்று சொல்லிவிட்டு சேனலை மாற்ற துவங்கினான்.

"ராகேஷ், உன் அப்பா கிட்ட இப்போவாவது பேசு."

"ப்ளீஸ். அத மட்டும் சொல்லாத. வேற எது வேணாலும் பேசு."

"அட்லீஸ்ட் உன்ன அவரு படிக்க வெச்சு இந்த அளவுக்கு கொண்டு வந்ததுகாவது?"

"அது அவரோட கடமை."

இப்போது சரண்யா ராகேஷை நேருக்கு நேராய் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"எத்தன பேரெண்ட்ஸ் அவங்க கடமைய ஒழுங்கா செய்யறாங்க? சொல்லு?"

"அத பத்தி பேசாதன்னு சொல்லிட்டேன்."

"நான் சொல்றத ஒரே ஒரு வாட்டி கேளு. ஜஸ்ட் ஏதோ ஒரு வயசானவர் கிட்ட பேசுறதா நெனச்சுக்கோ. அவருக்கு நிச்சயமா ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன் அம்மாவுக்கும் தான். ஒரு ரெண்டு நிமிஷம் பழச எல்லாம் தள்ளி வெச்சுடு. ப்ளீஸ் எனக்காக. ஒரே ஒரு வாட்டி பேசு. ப்ளீஸ்."

ராகேஷ் மவுனமாய் இருந்தான். அன்று முழுதும் அவன்  தூங்கவில்லை.ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அந்த முடிவுக்கு வந்தான். பின் மூன்று நாட்கள் வழக்கமாக ஆபீஸ், வேலை, அயர்ச்சி.

சனிக்கிழமை வந்தது. ராகேஷும் சரண்யாவும் ராகேஷின் அம்மாவை பார்க்க சென்றார்கள். வீட்டிற்க்குள் நுழையும் போதே ராகேஷிற்க்கு வழக்கத்திற்கு மாறாக ஒரு பதற்றம் இருந்தது. கஷ்டப்பட்டு சிரித்து சமாளித்து கொண்டான். சம்பத் படுக்கையறையை விட்டு வெளியே  வரவில்லை. ராகேஷ் வந்தால் சம்பத்திற்கு வீடு அந்த படுக்கையறை மட்டும் தான். வெளியே வர  மாட்டான். ராகேஷ் பெரும் தைரியத்தை வரவழைத்து சம்பத்தின் படுக்கையறைக்குள் நுழைய முற்ப்பட்டான். சண்டையிடும் போது இருந்த வேகம் சமாதானமாக போக என்னும் போது காண கிடைப்பதில்லை. தயங்கியபடியே சம்பத் அருகில் சென்றான். சம்பத் யாரோ உள்ளே வரும் காலடி சத்தத்தை கேட்டு எழுந்து பார்த்தான். வருவது ராகேஷ் என்று தெரிந்ததும் சம்பத்திற்கும் ஒரு மாதிரியான பதற்றமும் லேசான மகிழ்ச்சியும் பிறந்தது. ராகேஷ் சம்பத்தின் அருகே சென்று பேச வாய் எடுத்தான்.

" ப் பா !"

No comments:

Post a Comment