Saturday 28 June 2014

Story 35: கால மாறிலி



கால மாறிலி
"பாஸ், தூக்க மாத்திரை கிடைக்குமா? என்றான் அவன்.
"ப்ரிஸ்கிரிப்ஷன் (prescription) இருக்கா?" கேட்டான் கடைக்காரன்.
"இல்ல பாஸ், ஆனா வேணும்", அவன் பதிலளித்தான்.
"இல்லனா எல்லாம் தர முடியாது, கெளம்பு ", கடுகடுத்தான் கடைக்காரன்.
"பாஸ் ப்ளீஸ், நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு. நீங்க முழு ஸ்ட்ரிப் எல்லாம் தர வேணாம். ஒரே ஒரு மாத்திரை தாங்க. நான் வேணும்னா ஸ்ட்ரிபுக்கான காச குடுத்திடுறேன்", அவன் கூறினான் சற்றே கெஞ்சலாக!
அவனை மேலும் கீழும் பார்த்து ஒரே ஒரு மாத்திரை கொடுத்தான் கடைக்காரன். எவ்வளவு காசு வாங்கினான் என்று தெரியவில்லை !
அவன்  பெயர் சந்தோஷ்.
உத்தியோகம்: சாப்ட்வேர் இன்ஜினியர்.
பெயருக்கும் அவன் தற்போதைய நிலைக்கும் சம்பந்தம் இல்லை தான்.
மணி ஏழு. அவன் ஹாஸ்டல்  அருகே உள்ள அசைவ உணவகத்திற்கு சென்று ஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி வாங்கி வெட்டு வெட்டு என்று வெட்டி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தான். அவன் அறையும் மற்ற ஆடவர்களின் அறையைப்போல் சட்டைகள் இறைந்து, அலமாரி கலைந்து இருந்தது. அவன் அறையில் மொத்தம் ரெண்டு பேர். இன்னொருவன் வேலையை விட்டு வரவில்லை. மெத்தையை சரி செய்துவிட்டு  பெரும்பாட்டிற்கு பின் வாங்கிய அந்த தூக்க மாத்திரையை உட்கொண்டு விட்டு மெத்தையில் பொத்தென்று விழுந்தான்.
தூக்கம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு அவன் மண்டையில் ஒரு லேசான வலியை அவன் உணர பெற்றான். ஒரு நேரத்தில் ஒரு எண்ணம் என்றில்லாமல் மாறி மாறி தோன்றி மறைந்து நெளிந்து நூட்லஸ் போல எண்ணங்கள் பின்னி பிணைந்து அவனை நிம்மதிக்கு அருகில் கூட கொண்டு செல்ல விடவில்லை. நீண்ட நேரத்திற்கு (அரை மணி நேரம் அல்ல அதை விட குறைவு) அவன் மனம் ஒரு நிலையை அடைந்தது. அப்போது அவன் நினைத்த நிம்மதியான தூக்கத்தை அடைந்தான். அந்த நிம்மதி அவன் கண்ட கனவிலே நன்கு தெரிந்தது. அவன் அறையே மிகவும் சுத்தமாக எந்த ஒரு பொருளும் இல்லாமல் அவன் படுக்கை மட்டும் நடு அறையில் இருப்பதை போலவும் வெண்ணிற போர்வைக்குள் அவன் படுத்திருந்ததைப்போல் போலவும் கனவு. இந்த இடத்திலிருந்து அசுத்த அறையில் உண்மையில் உறங்கும் அவனை பற்றி சொல்லும் போது எதை குறிக்க வேண்டுமோ அதன் உரிய வார்த்தைக்கு முன் "நிஜ" என்னும் சொல் இருக்கும் (உதாரணத்திற்கு "நிஜ  மனம் "அல்லது "நிஜ உடல்" ) . அதைப்போல் அந்த தனித்த சுத்தமான கட்டில் மட்டும் இருக்கும் கனவில் இருக்கும் அவனை பற்றி சொல்லும்போது உரிய வார்த்தைக்கு முன் "கனவு" என்னும் சொல் இருக்கும் (உதாரணத்திற்கு "கனவு மனம்" அல்லது "கனவு உடல்").
இன்னும் தூக்கத்தில் ஆழ்ந்தான். கனவு மனம், நிஜ மனம் இரண்டும் நிம்மதியை தழுவிக்கொண்டிருந்தது . திடீர் என்று முந்தைய தினம் அவன் சாப்ட்வேர் ப்ரோக்ராமில் ஏதோ ஒரு பிழையால் கிடந்து அல்லாடிய அந்த கனத்திற்கு அவன் இரு மனமும் சென்றது. கனவு மனம் அந்த ப்ரோக்ராமை ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தது . நிஜ மனம் இப்போதும் தூக்கத்தில். பிழையின் காரணத்தை கண்டுப்பிடித்து காலை சரி செய்ய சொல்லி கனவு மனம் நிஜ மனதிற்கு உத்தரவிட்டப்பின் மறுபடியும் தூங்க சென்றது.
பெரும் சண்டை -  கனவில். யார் யாரை அடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. யார் தள்ளியதில் அவன் அங்கே அந்த மலை உச்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறான் என்றும் தெரியவில்லை. ஆனால் இன்னும் சில மணித்துளிகளில் அவன் கீழே விழத்தான் போகிறான். இதோ விழுந்துதே விட்டான். கனவு உடம்பு திடும் என்று எழுந்தது. "நான் செத்துட்டேன்,  நான் செத்துட்டேன்" என்று கனவு மனம் பதைபதைத்தது. நிஜ உடம்பு லேசாக ஒரு நடுக்கத்தை மட்டும் காட்டியது!
தற்போதுள்ள அமெரிக்கா இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின் எப்படி இருந்திருக்க முடியுமோ அப்படி இருந்தது அந்த இடம். மங்கலான காட்சிகளாகவே தெரிந்தாலும் அந்த இடம் இந்த யுகத்தில் இந்த உலகத்தில் இருப்பது போல நிச்சயம் தெரியவில்லை. ஆனால்  யாரோ ஒருவன் திடு திடு என்று ஓடுவதும், இல்லை இல்லை ஏதோ திருடிக்கொண்டு ஓடுவது போல தெரிந்தது. ஒரு சந்தை தாண்டி செல்ல முயன்ற அவனை அந்த சந்தில் இருந்து ஒரு கால் தடுக்கி விட்டது போல் தோன்றியது கனவு மற்றும் நிஜ மனங்களுக்கு!
அடுத்த நாள் மாலை ஐந்து மணி! கிட்ட தட்ட இருபது நேர தூக்கத்திற்குப்பின் தன் தற்காலிக நிம்மதியை கலைத்து  தினசரி பணிகளை செய்தான். பின் அந்த கனவு மனம் கொடுத்த திருத்தத்தை அவன் லேப்டாபில் குறித்து வைத்து கொஞ்சம் மென்மையான பாடல்களை கேட்கலானான். அவ்வபோது அந்த கால் அந்த திருடனை தடுக்கி விழ செய்த காட்சி மட்டும் அவன் நினைவில் வந்து போனது. வெகு நாட்களுக்குபின் ஒரு இனிய தூக்கம், ரம்மியமான இசை. குதூகலமானான்! ஆனால் அடிக்கடி அதே காட்சி வருவதை இப்போது உணர்ந்தான். ஏனோ குழம்பினான். சற்றே சிந்தனையில் ஆழ்ந்தான். அடுத்த நாள் அதே போன்று கனவுகள் நிறைந்த தூக்கம் - அதுவும் ஒன்றோடொன்று இனைப்பேதும் இன்றி!
கொஞ்சம் தீவிராமாக கூகளில் தேட ஆரம்பித்தான். வேலையை பற்றி ஏதுமில்லாமல் கனவுகளை பற்றியும் எண்ணங்களை பற்றியும் மேலோட்டமாக ஒரு அலசு அலசினான். அந்த மேலோட்டமே அவனை கவர்ந்து இழுத்தது. தேடல் தீவிரமானது. ஐன்ஸ்டீன தியரி, லைட் ஸ்பீட் (ஒளி வேகம்) என்று தேடும் சொற்களும் அதிகரித்துக்கொண்டே போனது. சற்று நேரம் இளைப்பாற்றினான். பின் அவன் கைபேசியை கையில் வைத்து தன் தலையை தட்டியபடி "யாரு யாரு?" என்று யோசித்துக்கொண்டே "சோமு" என்றான்.
சோமு - அவனுக்கும் சாப்ட்வேரில் தான் உத்தியோகம் என்றாலும்  psychology, astronomy என்று மற்ற பல விஷயங்களிலும் நாட்டம் உள்ளவன். "மச்சான், உன்ன பாக்கணுமே. இன்னிக்கு முடியுமா?"என்றான் சந்தோஷ்.
"வா மச்சான், நான் வெட்டி தான்", சோமு பதிலளித்தான்.  சற்றும் நேரம் கடத்தாமல் அவனை பார்க்க சென்றான் சந்தோஷ்.
"வா மச்சான், என்ன மேட்டரு? எதாவது பிகரு விஷயமா?" சோமு கண்ணடித்த படி வினவினான் .
"பிகரு விஷயம்ன்னா நான் ஏன் டா உன்ன பாக்க வரேன்? இது வேற விஷயம். ஒரு விஷயத்துல கொஞ்சம் தெளிவு தேவைப்படுது! பக்கத்துல காபி ஷாப் போயி பேசலாமா?"
"ரெண்டு கப்பசினோ", என்று ஆர்டர் தந்த பின் சோமுவிடம் கண்ட கனவுகள், தடுக்கி விழ வைத்த அந்த காட்சி, அதன் பின் அவன் தொடுத்த தேடல்கள் என்று அனைத்தும் விவரித்தான் .  "ஒளி வேகத்துல ஒரு விஷயம் பயணிக்கும் பொது டைம் மெதுவா போகும்னு படிச்ச மாதிரி இருந்துது. ஒருவேளை கான்ஸ்டன்டா(constant) கூட மாற வாய்ப்பு இருக்குல?  எனக்கு தெரிஞ்சு அந்த வேகத்துல போற ஒரே விஷயம் நம்ம எண்ணங்கள் மட்டும் தான். அப்போ நம்ம கனவுல பாக்குற வேற உலகம் இல்ல மனுஷங்க எல்லாமே நிஜமா  கூட இருக்கலாம்ல?' என்று அவன் படித்தவைகளில் அவனுக்கு புலப்பட்டதை சோமுவிடம் கூறினான். "கனவுல ஒரு தொடர்ச்சி இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. அப்போ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு டைம் பிரேமுக்கு (frame) நாம போறதா கூட இருக்க முடியும் தானே ?" என்று முடித்தான்.
"ஹ்ம்ம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இருக்கே ! எண்ணம் , கனவு இதெல்லாம் நெவெர் எண்டிங் ரிசர்ச் (never ending research) மச்சான். அது முடியவே முடியாது. முடிஞ்ச மாதிரி தோணும் போது பார்த்தேன்னா ஆரம்பிச்ச எடத்துக்கே வந்திருப்பே. நீ சொன்னது எல்லாமே உண்மையாவும் இருக்கலாம் இல்ல சுத்த பேத்தலாவும் இருக்கலாம்", என்று சோமு முடித்த போது சந்தோஷ் மனதில் "சே, இவன் கிட்ட கேட்டு தப்பு பண்ணிட்டமோ" என்ற சிந்தனையை தவிர்க்க முடியவில்லை. அதன் பின் சோமு கூறிய எதுவும் அவனுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.  ஆனால் "futuristic சயின்ஸ்" என்னும் வார்த்தையை  மட்டும் அவனுடன் நடந்த உரையாடலிலிருந்து உருவினான்.
அறை வந்தான். கிடைத்த அந்த புதிய சொல்லை வைத்து தேட ஆரம்பித்தான். தேடல் டைம் மெஷின், டைம்  ட்ரேவல் என்று படர்ந்தது. டைம் மெஷின்- "இதுல எனக்கு ஒரு தெளிவு கிடைக்க போகுது" என்று மனதுக்குள் நினைத்தான். "யு கேன் ட்ராவெல் அக்ராஸ் செஞ்சுரீஸ் (You can travel across centuries)" என்று ஒரு மின் பதிவில் (பெயர் தெரிய வேண்டுமா என்ன?) இருந்ததை பார்த்தவுடன் அவன் மனம் அதிவேகமாய் துடித்தது. டாக்டர் V.R.சதாசிவம் என்னும் பெயர் மட்டும் நன்கு ஞாபகம் இருந்தது, அந்த பெயருக்கு பின் இருந்த பட்டங்கள் எதுவும் அவன் நினைவில் வைத்து கொள்ளும்படி இல்லை. அந்த வெப்சைட்டில் சதாசிவத்தின் விலாசம்  மற்றும் அவர் மெயில் ID யும் இருந்தது. உடனே அவருக்கு ஒரு மின் அஞ்சலில் அவன் கண்ட கனவுகள் அந்த காட்சி என்று எல்லாமே விவரித்து அனுப்பினான். அந்த மின் அஞ்சலுக்கு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பதிலும் வந்தது. அதில் சந்தோஷை நேரில் வந்து சந்திக்கும் படியும் குறிப்பிட்டிருந்தது. அவனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. விசித்திரமான பல கேள்விகளுக்கு விடை கிடைக்க போகிறதென்று அவன் தீர்க்கமாக நம்பினான்.
மறு நாள் அவன் சதாசிவத்தின் விலாசத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னமே வந்தடைந்தான். ஆராய்ச்சி கூடம் என்று நினைத்த அவனுக்கு அந்த விலாசத்தில் வீடு இருந்தது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அதை வீடு என்றும் சொல்ல முடியாது; அது ஒரு மாளிகையை போல் இருந்தது. சற்றே தயக்கத்துடன் மணி அடிதான் . கதவை திறந்தவரை பார்க்கும் பொழுது அவர் சதாசிவமாக தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைக்கையில், "ஹாய் சந்தோஷ், அம் சதாசிவம்" என்றார். அந்த மாளிகையில் அவர் மட்டும் தான் இருக்கிறார் என்பது ஆச்சர்யம் தான் என்றாலும் வீடு எங்கும் இறைந்து கிடந்த விஞ்ஞான சாமான்களை பார்க்கும் பொது அவரால் மட்டுமே அங்கு இருக்க முடியும் என்று உணர முடிந்தது.
"நீங்க அனலைஸ் பண்ணது ஒரு அளவுக்கு கரெக்ட் தான். டைம கான்ஸ்டன்டா (constant) மாத்த ட்ரை பண்ணோம்னா கண்டிப்பா எதிர் காலத்துக்கு போக முடியும். நான் அந்த ரிசர்ச் தான் இப்போ கிட்ட தட்ட முடிக்க போறேன்", என்றார் சதாசிவம் ஒரு பெருமிதத்தோடு.
"டே சோமு, இர்ரா உன்ன வந்து வெச்சுகிறேன்", என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சந்தோஷ்.
"அப்புறம் என் ரிசர்ச்க்கு நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணீங்கன்னா நாம ப்யுசர், பாஸ்ட், ப்ரெசென்ட்ன்னு (future, past, present) பேதமே இல்லாம வாழலம்", என்றார் சதாசிவம்.
"சொல்லுங்க சார், நான் என்ன பண்ணனும். எதுவா இருந்தாலும் நான் ரெடி", என்று படு உற்சாகத்தோடு தலையசைத்தான்  சந்தோஷ்.
"நான் ஒரு டைம் மெஷின் ரெடி பண்ணி இருக்கேன். நீங்க அதுல ட்ராவல் பண்ணனும்", என்ற சதாசிவத்திடம் "தாரளமா சார்" என்று உடனே பதிலளித்தான்.
"வாங்க டைம் மெஷின் கிட்ட போகலாம்", என்றார் மறுபடியும் பெருமிதத்தோடு.
அவன் நடந்து செல்லும் பொது அவன் ஒரு தலையாய் காதலித்த பெண்ணோடான அவன் எதிர்க்காலம் (அப்படி காதலை முதலில் சொல்லும் பட்சத்தில்), அவன் வேலையில் உயர்வு, தங்கை கல்யாணம், ஆயுள் என்று எல்லாவற்றையும் காண வேண்டும் என்று எண்ணி வைத்திருந்தான்.
"இந்த மஷீனுக்குள்ள போனதுக்கு அப்புறம் உங்க ஆன்மா வெளிய வரும். அதுக்கு எந்த மாசும் (mass) கிடையாது, அதனால ஒளி வேகத்துல அதால ஈஸியா பயணிக்க  முடியும். அதோ இருக்குல்ல,அங்க இருக்குற ட்ரான்ஸ்மிட்டர் (transmitter) வழியா அது பயணம் செய்ய ஆரம்பிக்கும். நீங்க,அதாவது உங்க எண்ணங்கள் எந்த எந்த யுகத்துக்கெல்லாம், எத்தன நூற்றாண்டு ம்ம்ம் ஜென்மம் கடந்து போகுதுன்னு நான் டிசைன் பண்ணி இருக்கிற டைம் ட்ரேசிங் (time tracing) கருவி வெச்சு தெரிஞ்சுக்குவேன். சரித்திரத்திலேயே காலம் தாண்டி பயனிச்சீங்கன்னு உங்க பேரு தான் முதல்ல வரும்!" , என்று முடித்தார் சதாசிவம்.
" சார், எனக்கு ஒரு சின்ன டவுட். அப்படி என் ஆன்மா என்ன விட்டு போச்சுன்னா எனக்கு ஒன்னும் ஆகாதுல்ல? திரும்ப என் உடம்போடையே வந்து சேர்ந்துடும் தான?"  
அதற்க்கு சதாசிவம் ஒரு கத்தை காகித்தை எடுத்து அவனுக்கு கான்பித்தார். “அதுக்கு தான் நான் இந்த தீசிஸ் எழுதிருக்கேன். அதுபடி இதுல பயனிக்கிற ஆன்மா உடம்ப வந்து சேறாம இருக்றதுக்கான ப்ராபெபலிட்டி 0.02 பெர்சண்ட் தான்.”
சந்தோஷிற்கு அதை கேட்ட பின் பேரதிர்ச்சி ஏற்பட்டது. 0.02 பெர்சண்ட்! உயிர் என்று வரும் போது  0.02 பெர்சென்ட் 99.98 பெர்சென்ட்டை விட பெரிதாய் பட்டது. "பத்தாயிரம் வாட்டி போனா ரெண்டு வாட்டி திரும்ப வராம போற வாய்ப்பு இருக்கு. அந்த ரெண்டு வாட்டி நான் பயனிக்கிற முதல் தடவையே வந்தா?” , என்று மனம் மொத்தமும் 0.02 பெர்செண்ட் பற்றியே யோசித்து கொண்டிருந்தது.
என்னப்பா? ரெடியா?”
அது சார். எனக்கு இன்னிக்கு கொஞ்சம் வேல இருக்கு. நான் நாளைக்கு.. வ்வ்வ்வரவா?”, என்று தயங்கிய படியே கூறினான்.
ம்ம்ம்ம் ஆல்ரைட். நாளைக்கு கண்டிப்பா வந்துடுங்க.”
சந்தோஷ் அந்த விசித்திர விஞ்ஞான மாளிகையிலிருந்து வேகமாக வெளியேறினான்.  அவனது ஹாஸ்டலுக்கு திரும்ப செல்லும் போதெல்லாம் சோமுவின் அந்த வரிகள் மனதில் ஓட துவங்கியது - "எண்ணம் , கனவு இதெல்லாம் நெவெர் எண்டிங் ரிசர்ச் (never ending research) மச்சான். அது முடியவே முடியாது. முடிஞ்ச மாதிரி தோணும் போது பார்த்தேன்னா ஆரம்பிச்ச எடத்துக்கே வந்திருப்பே!"
"ஹீ வாஸ் ரைட் இன் வே (he was right in a way)" , என்று தனக்கு மட்டும் கேட்க்கும் படி கூறிக்கொண்டு ரெண்டு நாட்கள் முன்பு அவன் சிக்கி தவித்த கம்ப்யூட்டர் ப்ரோக்ராமை பற்றி சிந்திக்க துவங்கினான் !

No comments:

Post a Comment