Saturday 28 June 2014

Story 36: அது பாலம் அல்ல சரணாலயம் ..




அது பாலம் அல்ல சரணாலயம் ..

அன்று பெருமழை.. பழனிி அவன் புத்தகக்கடையின் பெரிய பெஞ்சில் அமர்ந்துகொண்டு வாகன நெரிசலை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
புத்தகக்கடையென்றதும் ஈகிள் புக் சென்டர் போன்றோ , NCBH போன்றோ எண்ணிவிட வேண்டாம். அவன் வேலைசெய்தது ஒரு ப்ளாட்பார பழைய புத்தகக் கடை.
பழைய குமுதம், வண்ணத்திரையில் இருந்து, உலக இலக்கியங்கள் வரை அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இவன் வேலை, காலையில் பூக்கடைக்கு உள் இருக்கும் குடோனில் புத்தகங்களை எடுத்து வெளியில் அடுக்கி வியாபாரம் பார்த்துவிட்டு, இரவு மறுபடியும் புத்தகங்களை குடோனில் வைப்பது. தினம் நூறு ரூபாய் சம்பளம்.
இதே போன்று ஒரு மழை நாளில் தான், இங்கு வந்து சேர்ந்தான்.
சவேரியார் கல்லூரியில் தமிழ் துறை மாணவனாக இருந்த பழனிக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளை பிரியம், கல்லூரி விடுதிக்கும், கட்டணத்திற்கும் வசதியில்லாததால்.. என்ன செய்வதென்றிருந்த வேலையில் தோழன் பச்சை மூலம் கிடைத்தது இந்த புத்தகக்கடை வேலை.
புத்தகக் கடை என்றதும் பெருமழையெனக் கூட பாராமல் திருநெல்வேலி ஜங்ஷனுக்கு வந்திறங்கினான். பாரதியார் பணியாற்றிய .தி.தா. பள்ளியின் அருகில் இருக்கும் பாலத்தின் அடியில்தான் இவன் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
பூக்கடையின் உள்ளே இருந்த குடோனில்தான் இளங்கோவன் அண்ணாச்சி நின்றிருந்தார். அவர் அவ்வளவாக பேசமாட்டார்.. 'உர்' என்று இருப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அதே போல் தான் இருந்தார். கருப்பு நிறம், வெள்ளை சட்டை, காவி வேட்டி, அவர் நெற்றியில் இட்டுருந்த நாமம் மட்டும் "நான் நாடார்" என்று முறைத்துக்கொண்டு சொன்னது.
சேர்ந்த ஓரிரு வாரங்களிலேயே டீக்கடை சதாம் பாய், சாமி படம் ஃப்ரேம் செய்யும் கடை வைத்திருந்த குமார் அண்ணன், பெட்டிக்கடை வைத்திருந்த இசக்கி அண்ணன் என்று எல்லாரயும் பழகி விட்டான். அவர்கள் என்ன வேலை சொன்னாலும் செய்வான். அந்த கடைத்தெருவின் செல்லப்பிள்ளை ஆகியிருந்தான்.
பகல் முழுவதும் புத்தகங்கள் விற்பதும், படிப்பதும் அவனது வேலையாய் மாறியிருந்தது. கல்லூரிக்குக் கூட செல்லாமல் சில சமயம் கடையில் புத்தகம் வாசித்துக்் கொண்டிருப்பான்.
புதுமைப்பித்தன். ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜா.ரா என்று அனைத்தும் அத்துப்படி. இன்னும், அநேக புத்தகங்கள் இருந்தது அந்த புத்தகக்கடையில்.
ஒரு பாலத்தின் அடியில் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு ப்ளாட்பாரக்கடையில் அவனுக்கு அவ்வளவு பெரிய புதையல் கிடைத்திருந்தது.
என்ன தான் காஃப்கா முதல், கம்பர் வரை இலக்கியங்கள் அடுக்கி இருந்தாலும் மாந்திரீகமும், மலையாள ஜோதிடமும் தான் அதிகம் விற்கும், சமயத்தில் மாந்திரீக திரட்டு புத்தகங்கள் வாங்க திருச்செந்தூரிலிருந்தும் கூட வருவார்கள்.
தாய்மார்களிடம் ரமணிச்சந்திரனும், ராஜேஷ் குமாரும் விற்றுத்தீரும்.
பள்ளிமாணவிகளிடம் பாட்டு புஸ்தகங்கள், மாணவர்களிடம் பழைய வண்ணத்திரை, சில பெருசுகள் ' அந்த புக் இருக்கா? '  என்று கேட்ட நிகழ்வுகளும் நடந்தேறும்.
ஆனால் அவன் கி.ரா வையும், புதுமைப்பித்தனையும் எலிகளுக்கு உண்ணக்கொடுத்திருந்தான்.
ஒரு நாள் ஒருவர் வந்தார்.. 30 வயதிருக்கும் .. " ஜெயகாந்தன் புக்ஸ் இருக்கா? " என்றார்.. ஆர்வமாக தேவியையும், பழைய குமுதத்தையும் ஒதுக்கிவிட்டு தேடிக்கொண்டிருந்தான்.
என்ன நினைத்தாரோ.. திடீரென்று " விஷ்ணு புராணன் எவ்ளோ?" என்றார். "300 ரூவா" என்றான்..
பேரம்பேசாமல் பணத்தைத் தந்துவிட்டு அவர் சொன்னார், " நமக்கு சாமிதான் முக்கியம், இந்த வீட்ல இருக்கவ தான் ஜெயகாந்தன்னா.. இந்த நாடு நாசமா போறதே இந்த ஜெயகாந்தன் மாரி ஆளுகளாலதாந்தம்பி.. " என்றார்.
" இந்த நாடு நாசமாய் போகட்டும்.. என் ஜெயகாந்தனையும், கி.ரா வையும் எலிகளே திண்ணட்டும்" என்று நினைத்துக்கொண்டான்.
குமார் அண்ணன் சொன்ன ஏதோ ஒரு வேலைக்காக, பழைய பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருக்கும் போதுதான் அந்த சிறுவனைப்பார்த்தான்.. ஊசி, பாசி விற்பவர்களுல் ஒருவன், அவர்களும் பாலத்தின் அடியில், டெண்ட் குடிகளில் வாழ்கிறார்கள்.
அவன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். பழக்கடையில் நின்றுகொண்டிருந்தவரிடம், இடது கையால் அவர் கையைத்தேய்த்து, வழது கைநீட்டுவான்.. தந்தாலும், தராவிட்டாலும் அதே சிரிப்பு தான். என்னருகில் இருந்த J.M பேக்கரியில் நின்றிருந்த பருதா பெண்ணிடம் செல்ல, அவள் பயந்ந்து தன் கணவனிடம் கைநீட்ட, அவர் அவனுக்கு இரண்டு ரூபாய் தந்தார்.
பதக்கம் வாங்கியவனைப்போல் அந்த காசை, தூரத்து கரும்புச் சாரு கடையினருகே நின்றிருந்த அவனது நண்பர்களுக்கு காண்பித்து சந்தோஷப்பட்டான்.
அவனருகில் வந்தான், அதே சிரிப்பு..
"உன் பேர் என்னலா? "
" சூர்யா"
" சூரியாவா? யாருல உனக்கு பேரி வெச்சது?"
அதே சிரிப்பு..
அருகிலிருந்த எடைப்பார்க்க மிஷினில் ஒருவர் காசு போட்டு சீட்டுக்காக காத்திருந்தார்.. இவன் ஓடிப்போய் ,
" அது வேல செய்யாது, கீழ இருக்க பட்டன அழுத்துங்க காசு வந்துரும்" என்றான்.
அவர் அழுத்தினார் காசு வந்தது, அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு சென்றார்.
பழநி அவனை அழைத்தான்..
" ஏம்ல அவன்ட காசு வந்துரும்னு சொன்ன? அப்புடியே விட்ருந்தா உனக்கு கெடச்சுருக்கும்லா?"
அதே சிரிப்பு..
இன்னொருவர் வந்தார், எடை பார்க்க..
சூர்யா இவனைப்பார்த்து சிரித்துவிட்டு முருபடியும் ஓடிப்போய்,
" அது வேல செய்யாது, அந்த பட்டன அழுத்துங்க காசு வந்துரும்" என்றான்.
அவனுக்கு காசு பெரிதாய் தெரியவில்லை. எல்லாரிடமும் ஒரு நாணயம் இருக்கும் அதை வாங்கிக்கொள்ள வேண்டும். அது ஒரு மிக அழகிய விளையாட்டு, சூர்யாவை பொருத்தவரை.
இரவில் கடை எடுத்துவைக்கும் நேரங்களிலெல்லாம், " என்னா.. எடுத்து வைக்கலையா?" என்று கர கர குரலில் மிரட்டுவார் முருகேசன் தாத்தா .
எப்போதும் பீ.டி பற்றவைத்துக்கொண்டு தோரணையாய் படுத்திருப்பார். ஒரு நாள் என்ன நினைத்தாரோ பழநியிடம் பேசிக்கொண்டிருந்தார்.
" அந்த காலத்துல இந்த பாலமெல்லாம் கெடையாது.. இந்த பள்ளிகொடம் மட்டுந்தா.. இந்த பாலம் போட்டது வசதுயாப் போச்சி, இல்ல நாமெல்லா எங்க போக ? "
இன்னொரு பீ.டி பற்ற வைத்துவிட்டு சொன்னார்.
" ரெண்டாம் உலகப்போரப்போ எங்க குடும்பம் ஊரவிட்டு ஓடி வந்துருச்சு.. இங்க லாரி ஓட்டுபனேன்.. இந்தியாவுல எல்லா ஊருக்கும் போயிருக்கேன்"
" நானும் ஊர் சுத்தனும் தாத்தா, லாரி ட்ரைவர் ஆகிடவா?"
" நீ படிலா, படிச்சுட்டு சுத்து"
" தாத்தா, இப்புடி பீடி குடிச்சிட்டே இருக்கியே, ஒடம்புக்கு ஒன்னும் ஆவாதா?"
ஒரு புப் சிரிப்பு சிரித்துவிட்டு, இன்னோரு பீடியை பற்றவைத்தபடி சொன்னார் " ஒன்னும் ஆவாதுல.. "
அவருக்கும் அந்த பாலந்தான் கடைதிக்கால அடைக்களம்.
இவன் பின் இரவு வரை குடோன் மெத்தையில் புத்தகம் படிப்பான்..
பாலத்தின் மேல் செல்லும் கார்களில் போகும் செல்வந்தர்களுக்கு பாலத்தின் அடியில் வாழும் எங்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பாலத்திற்கு அடியில் வாழும் அவர்கள், இவர்களை கண்டி கொள்வதுமில்லை.
அவன் தினமும் குளிக்கச்செல்லும் தாமிரபரணி ஆற்றங்கரையிலும் அவனுக்கு அநேக நண்பர்கள். கரையோரம் இருக்கும் மசூதி வாசலில் இருக்கும் கால் இல்லாத தாத்தாவின் சட்டையை துவைத்து வருவது வாடிக்கை.
மீன் பிடிக்க வரும் சிறுவர்கள், ஊசி பாசி விற்பவர்கள் என அனைவரும் இங்கு தான் குளிக்க வருவர். இவ்வளவு பேரும் அந்த பாலத்தின் அடியில் தான் பல வருடங்களாய் வாழ்கிறார்கள்.
தினமும் இவனைப் பார்த்து குழந்தைச் சிரிப்பு சிரிக்கும் திலகவதி பாட்டியும், முகமெல்லாம் எரிந்து இவனைப்  பார்த்து உரிமையுடன் "டீ வாங்கித்தா" என்று கேட்கும் ராஜி அக்காவும்.. அந்த பாலத்தின் அடியில் தான் வாழ்ந்தனர்.
அது இச்சமுதாயத்தில் இடமில்லாதவர்க்கெல்லாம் இடமளித்த தெய்வம்..
யார் போட்ட உத்தரவோ தெரியாது.. திடீரென்று ஒரு நாள் ப்ளாட்பாரக் கடைகளையெல்லாம் நீக்கிவிட்டு வேலி போடும்படி உத்தரவாம்.
பச்சை போன் போட்டு,
" ஏல, என்ன பன்னுத ?
அங்க இனி கடை போட முடியாதாம், நீ கெளம்பி NGO காலணி வந்துடு, ரூம் ரெடி பண்ணிட்டேன்"
அவனுக்கு அது மிகப் பெரிய அதிர்ச்சி..
என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தான்..
அவனுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் இனி அவனுக்கு இல்லை..
அதைவிட, அந்த பாலத்திற்க்கும் அதன் மக்களுக்கும் இவனுக்கும் சமந்தம் முடிகிறது ,
இனி முருகேசன் தாத்தா இவனை மிரட்டப் போவதில்லை,
திலகவதி பாட்டி இவனைப் பார்த்து குழந்தை சிரிப்பு சிரிக்கப்போவதுமில்லை, ராஜி அக்கா? சூர்யா?
இனி மசூதி தாத்தாவிக்கு யார் சட்டை துவைத்துக் கொடுப்பார் ?
யாரையுன் பார்க்ககூடாது.. பார்த்தால் அழுதுவிடுவோம் என்று.. உடைந்த மனதுடன் வேரு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பினான்..
சரணாலயம் அழிக்கப்பட்டடுவிட்டது.. இனி பறவைளுக்கு வாழ இடமில்லை..
ப்ளாட்பார கடைகள் யாவும் நகர்ந்து கொண்டிருந்தது. டெண்ட் குடைகள் காணவில்லை.
கடைசியாக அவன் அந்த பாலத்தைப் பார்த்தபோது, அவர்கள் வேலி போட்டிக்கொண்டிருந்தார்கள் !

No comments:

Post a Comment