Saturday 28 June 2014

Story 37: ரயில்

ரயில்
மனிதனின் படைப்புகளிலேயே ரயில் ஒரு கவிதை.
பல பேரின் கண்ணீரை, காதலை, பிரிவுகளை, உறவுகளை, இன்னும் எத்தனையோ உணர்வுகளை இதயங்களில் பாய்ச்சிவிட்டு, எந்த சலனமும் இன்றி கடந்து செல்கிறது.
ரயில் பயணங்கள் இரண்டு வகை..
ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் தந்த நீர்த்துளிகளில் மலை பார்த்து, வானம் பார்த்து, இயற்கையில் திளைத்து கண் அயர்ந்து, ஊர் சென்று சேர்வது ஒருவகை.
இன்னொரு வகை..
இரவு 7.45 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் .. 7.30க்கு அவசர அவசரமாய் கிளம்பினோம் ரயில் பிடிக்க..
" ஏல, பேசாம கோவில்பட்டில போய் டிக்கெட் எடுத்துட்டு, அங்க ஏறீருவோம்ல? "
"இதையே புடிச்சிரலாம்.. வேகமா ஓட்டு"
நாங்கள் ரயில் நிலையம் சென்று சேர, மணி 7.40 . நெல்லை எக்ஸ்பிரஸ் ஒரு நீண்ட மலைப்பாம்பு போல் எங்கள் முன் நின்றிருந்தது.
"நீ போய் எங்கயாவது எடமிருக்கா பாரு.. நா வண்டிய உட்டு, டிக்கெட் எடுத்துட்டு, அப்புடியே தம் வாங்கிட்டு வந்துட்றேன் "
ராபின்தான் இந்த ரயில் யோசனை சொன்னவன்.
" சென்னை போக 145 ரூவா தான் ஆகும். அங்க செலவுக்கு மிச்சம் பண்ணிக்கலாம்"
நல்லா யோசனையாய் தான் பட்டது. நான் கூட்டத்தைப் பார்க்காத வரை.
எஞ்சினருகே இரண்டு பெட்டிகளும், கடைசியில் மூன்று பெட்டிகளும் ' அன்ரிஸர்வ்டு ', அதில் ஒன்று ' லேடீஸ் '.
ரயிலைவிட பெரிய வரிசையில் நிற்பதை விட, கடைசிப் பெட்டியில் முட்டி மோதி நின்றகொள்ளலாம்.
ராபின் வந்த போது ரயில் நகரத் ்தொடங்கியிருந்தது.
எங்களுக்கு கிடைத்தது கதவுப்படிகள். அதுவும் ஒரு வரம்தான், குளிர்காற்று அடிக்காத வரையில்.
மெல்ல ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி அமர்ந்திருந்தோம், ' அன்ரிஸர்வ்டு ' பெட்டியில் இரண்டு நிருத்தங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சண்டைகளாவது நடந்தேறும்.. அது ரயிலின் உள் சுவர்களிலும் எழுதப்படாத ஒரு சட்டம். இரவுகளில் குழந்தைகளுக்கு பதிலாய், நிலவும், இருள் மேகங்களும் ரயில் பயணிகளுக்கு கையசைத்துக்கொண்டு தானிருக்கிறது..
" எவம்ல அது, மெட்ராஸ் காரன் தானல? உனக்கு மட்டுந்தா பேசத்தெரியுமோ? ஒம்மால.. "
" ஏங்க,  நீங்க தாங்க மேல காலப் போட்டிங்க? "
" அதுக்கு ஆத்தானுவியோ? இங்க இருக்க எல்லா பயலும் திருநெல்வேலி காரனுவ, "
" நானும் திருநெல்வேலிதாங்க, தேவயில்லாம பேசாதீங்க.. "
" எந்தூருல ஒனக்கு ? "
" ஆளங்குள(ம்) "
" சரி சரி பேச்சவுடப்பா, என்ன பேசி என்ன கெடைக்கப்போவ்து? "
இன்னொருவர்..
" நீ எப்புடி எறங்கறேனு பாத்துருவம்ல.. "
சண்டையை வேடிக்கை பார்க்க பத்து பேர், நியாயம் சொல்ல பத்து பேர், அதற்குள் அடுத்த நிருத்தம் வந்துவிடும்..
சில சமயங்களில்,
" அட நம்ம ஊர்க்காரப் பயலா? "
" ஆமா, மேலத்தெருவுல, சென்ட்ரிங் போடுவாப்லல? ராசு? அவரு மகே "
" நம்ம ராசு மவனா? மூணாவது பையனா? உனக்கு செல்வி தெரியுமா? உனக்கு மதுநி மொறை "
"ஆமா தெரியூ.. "
"நான் அவள்த்தான கட்டுனேன் ,. அய்யா நல்லார்காகளா ? "
என்று ஸ்நேகமாய் முடிந்த சண்டைகளும் அநேகம்..
விருதுநகரில் இன்னும் பல பேர் ஏறினார்கள். கதவை மூடிக்கொண்டு பொராட்டம் செய்த்தால், போலீஸ்க்காரன் வந்து வசவுகளை அள்ளி வீசி திறந்துவிட்டான்.
அது என்ன மாயமோ தெரியாது, கிளம்பி கொஞ்ச நேரத்தில்  மொத்த சனமும் அமைதியாகிவிடும்.
நின்றுகொண்டிருந்தவரெல்லாம் இடைவெளியில் கால்வைக்க இடம் தேட , ஒரு கிளவி கால்நீட்ட ஆரம்பித்தது இன்னுமொரு சண்டை,.
மருகதவருகே ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண்ணும் நானும் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம்.
மதுரையில் ஏறிய ஜனம், விழி பிதுக்க, தொங்கிக்கொண்டு ஆரம்பித்தது பயணம்.. நல்ல மழையில் தொங்கிக்கொண்டே பாலங்கள் கடப்பதும், வயல் பார்ப்பதும் எவருக்கும் கிடைத்திடாத அனுபவங்கள்.
பக்கத்து கம்பார்ட்மெண்டில், முழு சீட்டில் படுத்துக்கொண்டு மழை ரசிப்பவனும், இப்படி தொங்கிக்கொண்டு பயணப்படும் நாங்களும் ஆறாம்் அறிவின் சாதனைகள்.
" வாடக்காத்து அடிக்குது இவனுக கதவ தொறந்த்து வெச்சிருக்கானுவ, அத சாத்துனா என்னா? " என்றார் ஒரு பெண்.
" இங்க நிக்கவே எடமில்லாம இருக்கோம், கதவ சாத்தனுமாம்ல. "
அடுத்த சண்டை ஓய்ந்து..
கதவு சாத்தப்பட்டுவிட்டது !
பக்கத்தில் படுத்திருந்த நேபால் காரனை கொஞ்சம் கால் நகர்த்தச்சொல்லி அமர்ந்து கொண்டும், சடாமுடி சாமி தோளில் சாய்ந்து கொண்டும் பயணம் பின்னிரவை நெருங்கிக்கொண்டிருந்தது..
 பிரண்டு படுத்த அந்த உடல் பருத்த பெண் எனக்கு நிற்க கொஞ்சம் இடைவெளி விட்டுவைத்தால் மகராசி..
நின்றுகொண்டே தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி, " அடுத்த ஸ்டேசன்ல நான் எறங்கிடுவேன், நீ ஒக்காந்துக்க " என்றார் ஒரு பெரியவர்.
ரயில் நின்றதும் அமர்ந்து  கொண்டேன். சூரிய ஒளியும், சில பறவைகளும் விடிந்து விட்டதென  கூறிச்சென்றது.
கொட்டாவி விட்டபடி,
"இது என்ன ஸ்டேஷன் ? "
"தாம்பரம் "
"தாம்பரமா? ராபினு தாம்பரம் வந்துருச்சு எறங்குடா " என்று அவனை உசுப்பி ஒரு வழியாய் இறங்கிவிட்டோம்.
எதுவும் ஆறிந்திடாத ரயில் மெளனமாய் நகர்ந்தது..
ஆம்.. ரயில் ஒரு கவிதைதான் !

No comments:

Post a Comment