Saturday 28 June 2014

Story 38: வர்ணங்கள் அற்ற தென்றல்

வர்ணங்கள் அற்ற தென்றல்
ஒரு நாள் தென்றல் என் கதவு தட்டி, காது திருகி என்னைப் பின் தொடர் என்றது.. நடு இரவில் , பிறைநிலவின் பிச்சை ஒளியில் , நகரம் தாண்டி ஒற்றையடி பாதையாய் காடு அடைந்தேன்..
தென்றல் ஒளிர்ந்தது.. நீலம், மஞ்சள்  . . அநேக நிறங்கள் ஆச்சிரியத்தில் எப்படி? என்றேன்.. " இது காடு" என்றது..
நகரங்களில் தென்றலுக்கு வண்ணங்கள் இல்லை, . ஹ்ம்ம்ம்.. தென்றலே இல்லை.. ஒரு சுழலாய் சுழன்று மரங்களை எல்லாம் எழுப்புவிட்டு.. ஆரவாரமாய் , " அவன் வந்துவிட்டான்" என்றது..
மரங்கள் எல்லாம் ஆச்சிரியமாய்ப் பார்த்தது.. செடிகளை உசுப்பிவிட்டு சொன்னது.. " அவன் வந்துவிட்டான்..
தென்றல் காடெங்கும் பரவி கூப்பாடு போட்டது.. தன் வர்ண்ங்களை காடெங்கும் விசிரிஅடித்து .. " அவன் வந்துவிட்டான் " என்றது..
காடே என் முன் மண்டியிட்டு, வருக என்றது..
என்ன செய்வதென்று புரியாதவனாய் மெல்ல சிரித்தேன்..
திடீரென்று ஒரு ஆந்தை " அவர் அரசனை வரச்சொன்னார் " என்றது..
" அவருக்கு யார் சொன்னது? "
" தெரியாது"
தென்றல் என்னை போகச்சொன்னது..
ஆந்தையைப் பின் தொடர்ந்தேன்.. அருவியினூடே , எங்கோ அழைத்துச்சென்றது..
ஒரு பூவனத்தில் நிற்கச்சொல்லி பறந்து சென்றது.. பூக்களெல்லாம் என்னைப் பார்த்து சிரித்து.. அவரிடம் பேசு என்றது..
"யாரிடம் ? "
என் முன் இருந்த பிரமாண்ட மலை மெல்லக்கண் விழித்து..
" வா, நீ இல்லாமல் காடு கண்ணீர் வடிக்கிறது.. எங்கு சென்றாய் ? "
" நான் சென்னை " என்றேன் ..
புரியவில்லை போலும்..
" தென்றல் அழைத்து வந்ததா ? "
" ஆம் .. தென்றலுக்கெப்படி வண்ணங்கள் ? மரங்கள் என்னை அரசன் என்றது ? "
" ஆம் நீ அரசன் தான் .. நகரத்தில் என்ன செய்து கொண்டுருக்கிறாய் ? "
" தெரியல " என்று சிரித்தேன்..
அதுவும் சத்தமாய் சிரித்தது.. சில பறவைகள் பயத்தில் பறந்தது.. "இங்கேயே இருந்து விடு? "
" இல்லை, எனக்கு நகரத்தில் வேலை இருக்கிறது.. "
" பொல்லாத நகரம் ..
நகரத்திற்கு நாங்கள் வருவதே இல்லை... நீ திரும்ப வர மாட்டாயா?"
" வருவேன்.. உங்களைப்பற்றி என் மக்களுக்கு சொல்லிவிட்டி வருகிறேன் .. என்னைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரித்த என் ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டு வருகிறேன் .. நான் அரசன் என்று.. "
அவர் சத்தமாய் சிரித்தார்.. காடுகள் அதிர ..
" நம்ப மாட்டார்கள் !"
" முயற்சி செய்கிறேன்.. "
கொஞ்சம் யோசித்துவிட்டு..
கைநீட்டி நிலவை மறைத்திருந்த மேகத்தைக் கையில் எடுத்து எனக்குத் தந்து விட்டு சொன்னது..
" இதை வைத்திரு, உன்னைத் தேடி வரும் தென்றலுக்கு உதவியாய் இருக்கும் " என்றது..
நான் நகரத்திற்கு வந்து , அநேக நாட்கள் கடந்து விட்டது..
அவர் சொன்னது போல்.. இது பொல்லாத நகரம்..
வழிகாட்ட ஆந்தைகள் இல்லை.. நிழல் தந்த மரங்கள் இல்லை.. செடிகள் இல்லை..
ஆனால் அவர் கொடுத்த மேகம் மட்டும் என்னிடம் உள்ளது..
என்னைத் தேடி வந்த தென்றல், நகர வீதிகளிலும், தார்ச்சாலைகளிலும் சிக்குண்டு தன் வர்ணங்களை இழந்திருக்கக்கூடும்் !
ஆனாலும், என்னை தீண்டி விட்டுச்செல்கிறது வர்ணங்கள் அற்ற தென்றல்..

No comments:

Post a Comment