Monday 28 July 2014

Story 100: வெற்று வெளி.



வெற்று வெளி.

// 1 //
நாம டைவர்ஸ் பண்ணிருவோமா ரகு?
ம்.
ரகு என்று சொல்லப்படும் என் கணவன் என்னை நிமிர்ந்து பார்க்கும் தேவை கூட தோன்றாது தலை குனிந்தே சொன்னான். ம்.
நீ என்ன நினைக்கிற? அதை சொல்லு.
ம்.  மறுபடியும்.
எழுந்து பால்கனி போய், ஒரு இரண்டு நிமிடம் சும்மா இருந்து, பின் மிக மெதுவாக ஒரு சிகரெட் புகைத்து வரும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மெதுவாக ஹாலுக்கு வந்தவன், மறுபடியும் சொன்னான். 
ம்.
விருட்டென்று எழுந்து பெட்ரூம் போய் கதவை சாத்தி ம் என்ற ஒற்றை எழுத்தின் அத்தனை அர்த்தங்களும் புரிந்து கொள்ளமுடியாமல் அழுது கொண்டே இருந்தவள் எப்பொழுது தூங்கினேன் என்று தெரியாது.
.
Hai, I’m Nanthini.  This is my first interview என்று சொல்லி அருகில் இருந்தவனோடு அறிமுகம் செய்து கொண்டேன்.  அறிமுகத்தை விடவும் பெரிய அவசியம்  இண்டர்வியு அன்று பேச்சு வருமா என்ற பயம் தீர வேண்டியே அப்படி சொன்னேன்.  Hai.  Im Raghu.  This is my 5th interview.  Seems you are so restless.  இந்த அளவிற்கு நீங்கள் பதட்டப்படத் தேவை இல்லை, உங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று ஸ்நேகமாய் சிரித்து பதில் சொன்ன அந்த தருணம் எனக்கு அவனை மிகவும் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
.
பெசன்ட் நகர் பீச் கடற்கரையில் அருகருகே அமர்ந்திருக்கிறோம். எல்லா வெள்ளிக்கிழமை மாலை நேரங்களும் இப்பொழுது இப்படித்தான். ஆறு மணி அளவில் வருவோம். எட்டு மணி வரை உட்கார்ந்து அலைகளைப் பார்த்துக் கொண்டே இருப்போம்.  அன்று மட்டும் என்னவோ தெரியவில்லை, சற்று பதட்டமாகவே இருந்தான்.

நந்தினி, do you love me?
என் பதில் எதிர்பார்க்காமலே இரண்டு நிமிடம் கழித்து,  I think Im in love with you என்றான். சொன்னதோடு நிற்காமல் மிக மென்மையாய் என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.  அவ்வளவு மென்மையான தொடல் அவ்வளவு மிகுதியான ஒரு உணர்வைச் சொல்லும் என்பது நான் அது வரை அறியாதது.  பதில் சொல்ல வேண்டும் என்றே தோன்றவில்லை.  அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன் இறுக்கமாக. இன்னமும் சற்று நெருங்கி போய், I know, and Im too,  என்று சொன்னேன்.
.
இருவருக்குமே அந்த இன்டர்வியுவில் வேலை கிடைத்தது.  இருவருமே ஒன்றாகத் தான் வேலையில் சேர்ந்தோம். ஆனால், I love you சொன்ன பிறகு, ரகு தெளிவாகச் சொன்னான், நந்தினி, நான் வேறு கம்பெனி மாறிக்கொள்கிறேன் என்று. இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் போது அலுவல் சார்ந்த பதட்டங்கள் நிறையவே வரும்.
Being in love என்பது எவ்வளவு இனிமையானது, சுகமானது என்று அடுத்த வாரங்களில், மாதங்களில் வருடங்களில் இருவருமே உணர்ந்து கொண்டோம். நீங்கள் நினைக்கும் காதல், புரிதலும் எங்களிடையே இருந்த காதல், புரிதலும் ஒன்றாகுமா என்று தெரியவில்லை. செக்ஸ் வாஸ் ஆல்வேஸ் செக்கண்டரி. வாரம் ஒரு முறை மட்டுமே சனிக்கிழமைகளில்  மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் இரவுகள் மிக இனிமையானவை.  என்னைக் கேட்டால் அன்றைய பொழுதைக் கழிப்பதே அன்றன்றைய இரவுகளுக்காகத் தான் என்பேன்.  சொர்க்கம் என்பது எங்கும் தனியாக இல்லை. எல்லா வேலைகளும் முடிந்து பெட்ரூம் போனப் பிறகு நீங்கள் தூங்க ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன் விழித்திருக்கும் நேரம் தான் சொர்க்கம்.  எங்கள் இருவருக்குமே மிகப் பிரியமான நேரம் அது தான்.  பத்து மணி தாண்டி பெட்ரூம் போன உடனே முதல் வேளை, மியூசிக் சிஸ்டம் ஆன் செய்து விடுவோம். குறைந்தது பன்னிரண்டு மணி வரை ஏதாவது ஒரு சி டி ஓடிக்கொண்டிருக்கும். பாட்டு கேட்டுக்கொண்டே, புத்தகமும் படித்துக் கொண்டே டி வி யும் பார்ப்போம். என்னால் இத்தனை நாட்களில் அவனைப் பார்க்காமல் அவன் கை என் கை விரல் ஒவ்வொன்றாய் பிடித்து, வருடி, கோலம் போட்டு பின்  ஒரு good nightpch முத்தம் பகிராமல்  தூக்கம் வராது. அவனைப் பற்றி நானும், என்னைப்பற்றி அவனும் இருவரும் அன்றைய பொழுதிலும், பொழுது முடிந்த இரவிலும் எந்த குழப்பமும் இன்றி அமைதியாக, பதட்டம் இல்லாமல் அன்றைய தினம் முடிந்ததா என்பதில் மிகவும் பிரயத்தனப்பட்டோம். அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.  ஆனால், நானும், ரகுவும் ஒத்துக்கொண்ட பல விஷயங்களில் ஒன்று, அழகு என்பது, ஒரு ஆணோ, பெண்ணோ, எந்த கவலையும் இன்றி நிம்மதியாக, அடித்துப் போட்டது போல தூங்கும் போது தான் மிக அழகாக இருப்பான்/ ள். இத்தனை வருடங்களில் பெரிதாக எதற்கும் அலட்டிக்கொண்டதோ சண்டை போட்டதோ இல்லை. ரகுவாகட்டும், நானாகட்டும், கோபப்படும் போதும் கூட சிரித்துக் கொண்டே தான் கோபப்படுவோம்.
சமீபமாய் தான் இப்படி அடிக்கடி வெறுமையாய் இருக்கிறான். அவனாக எதற்கும் பேசுவதில்லை. நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் வரும். அவன் சிரித்து நான் பார்த்தது எனக்கே மறந்திருக்கும் போல தோன்றுகிறது. என்ன ஆனது என்ற கேள்வியே அவனிடம் கேட்டு கேட்டு சலித்தும் போயிற்று.  முதல் முறையாக இத்தனை ஆண்டுகளில் என் கணவனை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போன இயலாமை கொடுத்த கோபத்தினால் தான் நேற்று அவனிடம் அப்படி வெடித்து விட்டேன்.

// 2 //



Nanthini, I think we both need a break.

Am leaving.

Will be back when I feel its better for us

என்று ஒரு வெள்ளை துண்டு பேப்பரில் எழுதி வைத்து அன்றிரவு இரண்டு மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வந்து இன்றோடு சில பல  வருடங்கள் ஆகிறது, நினைவில் இல்லை நாட்களின் நீளம். கிளம்புவதற்கு  இரண்டு வாரங்கள் முன்னரே என் வேலையை விட்டு விட்டேன். சென்னையை விட்டு கிளம்பி எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரிந்தேன்.  முதல் இரண்டு மூன்று மாதங்களுக்கு எனக்கே எதுவும் புரிபடவில்லை  எதன் பொருட்டு விலகி வந்தேன் என்று.  நந்தினியோடு வாழ்ந்த காலங்களில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.  நன்றாக இருந்தது மட்டுமே எனக்கு பிடிக்காமல் போனதா என்று தெரியவில்லை.
ஆனால் கடைசி சில மாதங்கள் மட்டும் எனக்குள்ளேயே ஆயிரம் ஆயிரம் கேள்விகள், குழப்பங்கள்.  ஒரு சுழலுக்குள் சிக்கிக்கொண்ட மாதிரியான வாழ்க்கையில் தினங்கள் கழிவதாய் தோணிற்று. ஒரே மாதிரியாய் ஒரே நேரமாய் ஒரே வேலையாய் ஒரே வீடாய், ஒரே அலுவலகமாய், ஒரே மேனேஜராய், ஒரே ஞாயிறாய், ஒரே சகலமுமாய் ஆனதில் இன்னவென்று சொல்ல முடியாத எரிச்சலும் சலிப்பும் தோன்றிற்று. இனி வரும் காலங்கள் முழுவதும் இதே மாதிரியான ஒரு ஒழுங்கில் தான் கடந்து செல்லப்போகிறது என்பது உணர்ந்த போது மனம் ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்க ஆரம்பித்தது.  எதற்காய் எழுகிறாய், எதற்காய் வேலை பார்க்கிறாய், எதற்காய் - எதற்காய் என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும் ஆயிரம் ஆயிரம் பதில்கள் அதே சலிப்பும் எரிச்சலும் தான்.  வாழ்க்கை ஒரு வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  நந்தினியோடு இயல்பாய் பேசுவதோ உறவு கொள்வதோ என்னால் முடியாமல் போயிற்று. இணைப்புகளையும் பிணைப்புகளையும் உதறி விட்டு எங்கோ தொலை தூரம் போய் விடவேண்டும் என்று மனம் சொல்லிற்று.
எதுவும் செய்யவில்லை.  எவரிடமும் சொல்லவில்லை. கையில் ஐந்து பைசா கூட எடுத்துக்கொள்ளவில்லை.  மனம் போன போக்கில் போக வேண்டும் என்று கிளம்பினேன்.  கிளம்பிய பிறகு மனம் மேலும் குழம்பிற்று எந்த போக்கில் அது போக வேண்டும் என்று. கிடைத்த இடத்தில் உண்டேன். இற்று, அலுத்த இடங்களில் உறங்கினேன். முதல் இரண்டு மூன்று மாதங்கள் நந்தினியின் நினைவு வரும்போது எல்லாம் மனம் பதறி, அழுது புலம்பினேன்.  இதில் எது அவள் தவறு என்று.  நாளாக ஆக, நந்தினியும் நினைவுகளின் கடைசிகளில் போய் ஒளித்து வைத்துக் கொண்டேன்.  என்னையும் மறக்கலானேன்.  எதுவுமே தோன்றாத சூன்யமானப் பயணம்.  பயணித்தேனா என்றும் கூடத் தெரியவில்லை.
என் சுற்றம் மறந்தேன். என் இருப்பு மறந்தேன்.  இறை தேடுதல் என்றோ, ஆன்மா தேடல் என்றோ எந்த கோட்பாடுகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் போய்க் கொண்டே இருந்தேன். கோவில்கள் உணவுக்கும் உறக்கத்திற்குமான இடங்களாக மட்டுமே இருந்தன.  இந்த நாள் என்பது என்ன, அதில் நடந்தவை / நடப்பவை  என்ன என்ற கவலைகள் இன்றி ஒரு நாளை கடந்து பாருங்கள் நான் சொல்லும் வெறுமை புரிந்து கொள்ள.
.........

இது எந்த ஊர், எந்த மக்கள், என்ன கிழமை, என்ன மாதம், எது என்ன, என்ன என்ன, ஏதும் தெரியாத ஒரு பொழுதில், நினைவுகள் தவறிய பொழுதில், இன்றோ நாளையோ நான் என்ற நான் என்ற எவனோ முடிவின் எல்லையைத் தொடப் போகிறேன் என்று தெரிகிறது. என் மரணம் எனக்கும் தெரியப்போவதில்லை, எவருக்கும் தெரியப்போவதில்லை என்று தோன்ற ஆரம்பித்தப் பின், நினைவுகள் அங்குமிங்குமாய், பின்னும்முன்னுமாய் சுற்றுகிறது.
Nanthini, I think we both need a break.

Am leaving.

Will be back when I feel its better for us

என்று எழுதி வைத்து வந்தது முதல் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வருகிறது.
நந்தினி, I.. .



.





No comments:

Post a Comment