Wednesday 30 July 2014

Story 105: காதல் எனப்படுவது யாதெனின்!

காதல் எனப்படுவது யாதெனின்!

"நீ குடிப்பியாடா அருண்?! "...

இத்தனை நேர உரையாடலுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாத ஒரு கேள்வியை சைந்தவி கேட்ட போது சற்று திகைத்துதான் போனேன்.

ஆனால் அதுதான் சைந்தவி!அவள் எப்போதுமே அப்படித்தான். சரியோ,தவறோ மனதில் தோன்றியதை அப்படியே,அந்த நொடியே கேட்டுவிடுவாள்.எனக்கு அவளிடம் பிடித்த விசயமும் அதுதான்.

எதற்காக இப்போது இப்படி ஒரு கேள்வி என்ற நெற்றிச்சுருக்கலுடனே, "என்ன சைந்தவி,திடீர்னு இப்படி ஒரு கேள்வி?! "என இன்னுமொரு எதிர்கேள்வியையே பதிலாக்கினேன்!
"சும்மா தெரிஞ்சுக்கதான்....சொல்லேன்"

"ம்ம்ம்..எப்போதும்லாம் இல்லை..எப்போவாச்சும் பிஸ்னஸ் பார்டீஸ்..ஃப்ரெண்ட்ஸ் பர்த்டேன்னா மட்டும் லைட்டா..." என நான் மழுப்ப ஆரம்பித்திருந்த நேரத்தில்,

"இல்ல அருண்,வேண்டாம் ப்ளீஸ்..அதை குறைச்சிக்க ட்ரை பண்ணு..சுத்தமா நிறுத்திடீன்னா இன்னும் சந்தோசப்படுவேன் " என்று அவள் சொன்னபோது எரிச்சலாய் இருந்தாலும்..பின்ஒரு சமயத்தில்,குடிப்பழக்கத்தால் அவள் அப்பா சந்தித்த பிரச்சனைகள் தந்த பயமும்,என்மீதான அக்கறையுமே அந்த அறிவுரைகளுக்கான காரணம் என்று அறிந்த போது,அவள் மீதான காதல் இன்னமும் கூடித்தான் போனது!

சைந்தவியுடன் பழக ஆரம்பித்து இத்தனை நாட்களில்,அவள்மீதான காதல் காற்று எந்த கணத்தில் எனக்குள் புகுந்து வீச ஆரம்பித்தது என இன்னமும் சரியாய் சொல்லமுடியவில்லை!

இளையராஜா இசை என்றால் உயிர் எனக்கு.இன்னும் சரியாய் சொல்வதென்றால் ராஜா எனக்கு கடவுள்.அவரின் அதிதீவிர பக்தன் நான்!மனம் கனத்திருக்கும் நேரத்தில்..'கோபுர வாசலிலே' படத்தில்,ஜானகி அம்மாவின் குரலில் 'ஹாஆஆஆ...' என ஹம்மிங் உடன் ஆரம்பித்து ராஜாவின் இசை ராஜாங்கம் மெல்ல அதில் கலந்து 'தாலாட்டும் பூங்காற்று நானல்லவா...நீ கேட்டு பாராட்டு ...மன்னவா!" என ஒலிக்கையில் என்னையும் அறியாமல் என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்திருக்கும்!ஒரு பிறந்தநாளுக்கு எனக்கு மிக பிடித்த ராஜா பாடல்களை எல்லாம் ஒலித்தட்டாய் தொகுத்து "இந்தாடா உன் பர்த்டே கிப்ட்" என அவள் எனை ஆச்சர்யபடுத்திய தருணத்திலா.....?

"ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு சைந்தவி" என எதேச்சையாய் ஏதோ ஒரு பேச்சின் ஊடே நான் சொல்ல,
"நாக்கு செத்து போச்சுனா போயி அடக்கம் பண்ணிட்டு அடுத்த வேலையை பாருடா" என நக்கல் அடித்துவிட்டு அவள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் எனக்காக சிக்கன் குழம்பு செய்து கொண்டு வந்திருந்தாள்.
"வெந்நீர் கூட வச்சதில்லடா..புக்கை பாத்து ஏதோ செஞ்சி இருக்கேன்..அட்ஜஸ் பண்ணிக்கோ" என்றவளை விழி விலகாது பார்த்துகொண்டே முதல் கவளம் வாயில் வைக்கையில் கண்களில் துளிர்த்துவிட்டது கண்ணீர்.
"என்னடா,ரொம்ப காரமா இருக்கா?அப்பவே நெனச்சேன்" என கண்ணீருக்கான காரணம் புரியாமல் கேட்டவளிடம்,எப்படி சொல்லி புரியவைப்பேன்.."அடி பைத்தியமே..இது காரத்தினால் வந்த கண்ணீர் அல்ல..மிகப்பிடித்தவளின் அதீத பாசத்தின் கணம் தாங்காது மனம் நிறைந்த சந்தோசத்தின் வெளிப்பாடு அது என்று" எனக்குள்ளேயே எண்ணிய தருணமா...?

ஒருநாள் பேருந்தில் நானும்,அவளும் பயணிக்கையில் வேணுமென்றே அவளின் இடை சென்ற ஒருவனை,பேருந்து என்றும் பார்க்காமல் தன் ஹைஹீல்ஸை கழட்டி அடிக்க ஆரம்பிக்க..சுற்றியிருந்தவர்கள் "போதும் விடும்மா..ஏதாவது ஆயிறப்போவுது" என சொல்லும்வரையில் நிறுத்தவேயில்லை!அதன் பின்னான ஓர் பேரமைதியை உடைக்கும் பொருட்டு "ஏண்டி,இவ்ளோ டென்சனாயிட்டே?" என அசட்டுதனமாய் கேட்டு வைக்க...
"இங்கப்பாரு அருண்..நான் இப்படிதான்!என்னால மத்தபொண்ணுங்க மாதிரி எவனோ முகம் தெரியாதவன் பஸ்ல இடிச்சதுக்கு,அதை அங்கேயே கேக்காம,வீட்ல போயி ஒப்பாரி வக்கிறதெல்லாம் எனக்கு பிடிக்காது" என்றவள் விழியோரம் எட்டிப்பார்த்த ஓர் துளியை சட்டென ஒற்றை விரலால் துடைத்தபடி "அவன் செஞ்சது தப்பு அருண்..அதான் பொறுத்துக்கமுடியல"என்றவளின் தைரியத்தை மகிழ்வோடு பார்த்த தருணத்திலா...

இப்படி எப்போதென்று சரியாய் சொல்லமுடியாத ஒரு தருணத்தில் அவள்மீதான காதல் எனை முழுதாய் ஆட்கொண்டிருந்தது.
இதைப்போலவே ஒரு பட்டியல் என்னைப்பற்றி அவளிடமும் இருக்ககூடும்!என்னதான் எங்கள் மனம் முழுக்க காதலால் நிரம்பியிருந்தாலும் நானோ,சைந்தவியோ ' லவ் யூ' என்ற வார்த்தையை மட்டும் எந்த ஒரு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பரிமாறிக்கொண்டதேயில்லை!மனங்கள் பேசிக்கொள்ளும்போது வார்த்தைகள் மௌனமாகி விடுவது இயல்பு தானே!

எத்தனையோ நாட்களை நாம் கடந்துசென்றாலும்,சிலநாட்கள் மட்டும் ஏதோ ஒரு காரணத்தினால் வாழ்வில் மறக்கமுடியாத நாளாய் மனதில் பதிந்து விடுவதுண்டு!அன்றும் அது போன்றதொரு நாள் தான்.பிஸ்னசில் ஒரு ஏமாற்றம்.இதுபோன்ற ஏமாற்றங்களும்,துரோகங்களும் புதிதில்லை என்றாலும் இம்முறை ஏமாற்றப்பட்டது என் மிக முக்கிய நண்பன் ஒருவனால்!நம்மைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் துரோகிகளாய் தெரிய ஆரம்பிக்கும்போது தான்,இந்த வாழ்க்கை இத்தனை மோசமானதா என்றொரு வெறுப்பு தோன்றும்!

எல்லாவற்றையும் மறந்து,எங்கே ஆறுதல் கிடைக்கும் என யோசித்த நொடியில் நினைவுக்கு வந்தவள் சைந்தவி!அவளிடம் எல்லாவற்றையும் சொன்னதும் மனம் லேசானது போலொரு உணர்வு வந்தது.அவளும் ஏதேதோ சமாதானம் சொல்லி எனை தேற்ற முயன்றுக்கொண்டிருந்தாள்.மனதின் வலிகள் முழுமையாய் தீராது என்றாலும்,அப்போதைக்கு அவளின் வார்த்தைகள் மிக தேவையாயிருந்தது.

எனக்குள் ஏதோ உந்தித்தள்ள..

 "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா சைந்தவி?" என்றேன் அவள் கண்கள் பார்த்து.
ஒரு கணம்..ஒரேஒரு கணம் யோசித்தவள்,"இதை கேக்குறதுக்கு உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்ருக்கு..இல்ல?! " என்றாள் அவளுக்கே அவளுக்கான குறும்புச்சிரிப்புடன் என் கரங்கள் பற்றி.அவளின் முதல் ஸ்பரிஷம்..என் எல்லா கவலைகளையும் எங்கோ தொலைத்து விட்டதாய் எண்ணிய தருணம் அது.இப்படியாய் முன்சொன்னது போல் அந்த நாள் என் வாழ்வின்மிக முக்கிய நாட்களில் ஒன்றாய் இடம் பிடித்துவிட்டது.

எல்லா காதல்களையும் போல் எங்கள் காதலுக்கும் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.ஜாதி,அந்தஸ்து என வழக்கமாய் சொல்லப்படும் ஏதேதோ காரணங்களை சொல்லி எதிர்த்தார்கள்.ஆனாலும் என் தீர்க்கமான முடிவை கண்டு எங்கள் வீட்டில் அரைமனதுடன் ஒத்துக்கொண்டார்கள்.சைந்தவி வீட்டில் தான் எந்த மாற்றமும் இல்லை.நிச்சயம் ஒருநாள் மனம் மாறுவார்கள் என அவளுக்கு நம்பிக்கை சொல்லி,மிக எளிமையாய் ஆனால் மிக அழகாய் முக்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக்கொள்ள எங்கள் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகான இந்த ஒன்பது மாதங்களும்,எங்கள் வாழ்வின் வசந்தக்காலம் எனலாம்.அத்தனை மகிழ்வாய் நகர்ந்தன நாட்கள்.சந்தோசமான தருணங்கள் மட்டும் ஏன் இத்தனை வேகமாய் கடந்துவிடுகின்றன என அடிக்கடி தோன்றும்.அதற்குள் வீட்டில் சைந்தவியை பற்றி அம்மா ஜாடைமாடையாய் பேச ஆரம்பித்திருந்தார்கள்."கல்யாணம் ஆகி,வருஷம் ஒண்ணு ஆவப்போவுது..இன்னும் ஒண்ணுத்தையும் காணோம்..நாம பாத்து பண்ணியிருந்தா ஏதாச்சும் கேக்கலாம்..இப்போ யாரை போயி கேக்க?" என குத்தல்கள் அதிகமாயிருந்தன.சைந்தவி உள்ளுக்குள் மருகினாலும் ஒருபோதும் அந்த வருத்தத்தை என்முன் வெளிக்காட்டியதேயில்லை.

"சொந்தக்காரங்க எல்லாம் இன்னும் பேரன்பேத்தி பாக்கலையான்னு கேவலமா பேசுறாங்கடா" என அம்மாவின் நச்சரிப்பு அதிகமாகவே,ஒருநாள் நானும்,சைந்தவியும் அந்த புகழ்ப்பெற்ற மருத்துவமனைக்கு சென்றோம்.டாக்டர் இருவரையும் சோதித்துவிட்டு,சைந்தவியின் கருப்பை பலவீனமாக இருப்பதாகவும்,ஒரு உயிரை சுமக்கும் அளவிற்கு சக்திஇல்லை எனவும்,குழந்தை பிறப்பதற்கு மிக குறைந்த வாய்ப்பே இருப்பதாகவும் கூறிவிட்டார்.எனக்கு இது மிக அதிர்ச்சியாய் இருந்தாலும்,சைந்தவியை தேற்ற வேண்டி எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.

அன்று இரவு..கட்டிலில் இருவரும் முகம் பார்க்காமல் திரும்பி படுத்திருந்த போது என் தோள் தட்டி,
"அருண் தூங்கிட்டியா?"என்றாள்.
"இல்ல..தூக்கம் வரலைடா"
"அத்தை சொன்னாங்க..உன் தூரத்து சொந்தத்துல ஏதோ பொண்ணு இருக்காம்.அவுங்களுக்கு சம்மதமாம்!நீ வேணும்னா அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோயேன்" என்றதும் சட்டென்று எழுந்து உட்கார்ந்து அவளையே பார்த்தேன்.

எனக்கு தெரியும்.இதை கேட்பதற்குள் அவள் மனம் எப்படி வலித்திருக்கும்..உள்ளுக்குள் எப்படி தவித்திருப்பாள் என்று.
"லூசு மாதிரி பேசாதடி..இப்ப குழந்தை இல்லைனா என்ன?ஏன் யார்யாரோ சொல்றதையெல்லாம் கேட்டு மனசை குழப்பிக்கிற?எனக்கு நீ போதும்...நீ மட்டும் போதும்" என்றேன் தீர்க்கமாக.
கன்னம் வழிந்த நீர் துடைத்தபடி,
"ஏன்டா இப்படி..?ஏன் என்மேல இவ்ளோ பாசம் வச்சிருக்க?" என்றால் கம்மிய குரலில்.
"ஏன்னா..நான் உன்னை லவ் பண்றேண்டி! லவ் யூ மோர் தென் எனிதிங்" என்றேன் அவளை இறுக்கமாய் அணைத்தபடி!அப்போதைக்கு அந்த இறுக்கம் எங்கள் இருவருக்குமே மிக தேவையாய் இருந்தது!!

எனக்கு குழந்தைகள் என்றால் உயிர்.அது சைந்தவிக்கும் தெரியும்.அதனாலென்ன?யாரிடம் தான் குறைகள் இல்லை?!நிறைகுறைகளை கடந்து,எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாது ஒருவர்மீது ஒருவர் வைக்கும் ஆத்மார்த்தமான அன்பிற்கு பெயர்தானே காதல்!

No comments:

Post a Comment