Tuesday 22 July 2014

Story 80: ஒரு வேசியின் கதை...



ஒரு வேசியின் கதை...

நான் குமுதா என்கிற குமுதவல்லி. தலைப்பை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் நான் ஒரு வேசியென்று. இது நான் வாங்கி வந்த வரம் என்று சொல்லவா இல்லை சதி என்று சொல்லவா?

எனக்கும் ஓர் ஆசை இருந்தது. எல்லா பெண்களையும் போல் ஒருவனுக்கு மனைவியாக ரெண்டு மூணு குழந்தைகளுக்கு அம்மாவாக, எல்லோரும் மதிக்கும் பெண்ணாக தான் வாழ வேண்டும் என்று. ம்கூம்.. என் விதி வெறும் காமமும், ஆண்குறியும், அடங்கிய உலகமாக மாறிப்போனது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முதல் முதலாக என்னை புணர்ந்தவனின் முகம். எனக்கு அப்போது பதிமூணு வயது. அனாதை ஆசிரமம் ஒன்றில் தான் நானும் என் ரெண்டு தங்கைகளும் தங்கி இருந்தோம். நாங்கள் ஏன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தோம்?

ஒரு சின்ன பிளாஷ்பேக்..

ஐயர்சாமி இது தான் எங்க அப்பா பேரு. எங்க அக்ரஹாரத்திலே படிச்ச ஒருத்தர் எங்க அப்பா மட்டும் தான். அவரு இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சா ஊர் ஜனம் மொத்தமும் அவர அவ்வளவு பெருமையா பார்க்கும். தான் படிச்சவர் என்கிற மிதப்போ என்னவோ வேலை வெட்டி எதுக்கும் போக மாட்டார்.

அம்மா பாவம் கல்யாணமாகி வந்த முதல் வருஷமே ஒரு ஆண்குழந்தைய பெத்து எடுத்தா. அந்த குழந்தை ஏழு மாசத்திலே காய்ச்சல் வந்து இறந்து போச்சு. அதுக்கும் அஞ்சு வருஷம் கழிச்சி தான் நான் பொறந்தேன். அதனால அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். அதுக்கு அடுத்து ரெண்டு ரெண்டு வருஷ இடைவெளியில ரெண்டும் பொண்டுகளா பிறந்ததுல அம்மாவுக்கு ரொம்ப விசனமா போச்சி.

அப்பாவுக்கு அவர் தங்கை மேல அத்தனை பிரியம். பாசமலர் சிவாஜி சாவித்திரி மாதிரி அத்தனை உருக்கம். இருந்த சொத்து எல்லாத்தையும் தங்கை பேர்ல எழுதி வச்ச வெகுளி அப்பா. அதுக்கு உபகாரமா அப்பா மட்டும் அங்கே போய் சாப்பிடுவார்.

எங்களுக்கு பெருமாள் கோயில் உண்ட கட்டி சோறு தான் பெரும்பாலும்.. அம்மா அங்க இங்க போய் எதாவது வேலை செஞ்சி காசு கொண்டு வந்தா ராத்திரி உலை எரியும். இல்லாட்டி நானும் பெரிய தங்கையும் பகவான் பிச்சான் தேகி அப்படின்னு சொல்லிக்கிட்டே பாத்திரத்தை கையில தூக்கிட்டு போய் ஏதாவது சாப்பிட வாங்கி வருவோம்.

என்ன உசந்த ஜாதி தாழ்ந்த ஜாதி சாப்பிட ஒண்ணும் இல்லைன்னா எல்லாரும் ஒரே ஜாதி தான் பட்டினி ஜாதி தான். எனக்கு அப்ப ஏழு வயசு அம்மா காலரா வந்து படுத்த படுக்கையா கிடந்தா. அது தீபாவளி நேரம். தீபாவளிக்கு நாலு நாள் தான் இருந்தது.

எனக்கு புதுத்துணி எடுத்துத்தர சொல்லி அம்மாகிட்ட அழுது அடம் பண்ணிக்கிட்டு இருந்தேன். என்கிட்ட இருந்ததே ரெண்டு பழைய கிழிந்த பாவாடைகள் தான். என்னோட நச்சரிப்பு தாங்க முடியாம அம்மா அவளோட கல்யாண பட்டை என்கிட்ட குடுத்து டைலர்க்கிட்ட குடுத்து தைக்க சொன்னா. காசு அம்மா தருவான்னு சொல்லு என்றாள்.

நான் சந்தோஷமா அதை எடுத்துட்டு போய் டைலர் கடையில குடுத்துட்டு வந்தேன். வீட்டிற்கு வரும் வழியில பழையாத்துல இறங்கி குளியல் வேறு. பழையாத்து தண்ணி அமிர்தம் போல இனிக்கும். எப்பவும் எந்த கோடைக்கும் கூட வத்தாத ஆறு எங்க பழையாறு. குளிச்சி முடிச்சி வீட்டிற்கு போனா அங்க அம்மா சாமிக்கிட்ட ஒரேயடியா போய் சேர்ந்து இருந்தா.

காரியம் எல்லாம் முடிந்து ஆளாளுக்கு போய்ட்டாங்க. வத்சலா அத்தை மட்டும் அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தா. இந்த மூணு பொட்டை பிள்ளைகளையும் வச்சி நீ எப்படி காப்பாத்த போற? நான் வேணுமின்னா பசங்கள கூட்டிட்டு போய் படிக்க வைக்கிறேன் என்ன காலம்பற கொஞ்ச நேரம் சாயங்காலம் கொஞ்ச நேரம் எங்க ஓட்டல்ல வேலை செய்யட்டும் என்றாள்.

அப்பாவுக்கும் அது தான் சரியென்று பட்டது. தலையசைத்தார். வத்சலா அத்தை கூட நாங்களும் போனோம். அது என்னமோ தெரியல மாமாவுக்கு எங்களை பிடிக்கவே இல்ல. ஒரு மாசம் கூட அங்க இருக்க முடியல.

மீண்டும் அப்பா கூட அக்ரஹாரத்தில். பத்து நாள் போயிருக்கும் அப்பா எங்களை அழைத்து கொண்டு போனார். அது ஒரு அனாதை ஆசிரமம். என்னால இது தான் முடிஞ்சது அப்படின்னு அப்பா சொல்லிட்டு போனார்.

அது ஆசிரமம் அல்ல வதை முகாம். காலை ஐந்து மணிக்கே எழுந்திரிக்கணும் கொஞ்சம் பெரிய குழந்தைகள் எல்லாம் கூட்டி பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். சின்ன குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும். ஆசிரம வளாகத்திலே பள்ளிக்கூடமும் இருந்தது.

சாப்பாடு காலையில் வாழ்த்துப்பா பாடி விட்டு தான் சாப்பிடவே வேண்டும். கோதுமை ரவை கோதுமை கஞ்சி இல்லை காய்ந்த ரொட்டி இது தான் பெரும் பாலும் காலை உணவாக இருக்கும். அந்த கோதுமை ரவையில் வெண்புழுக்கள் நிறைய இறந்து கிடக்கும் ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட வேண்டும். வீணாக்கவும் கூடாது. தூக்கி தூர எறிந்து விட்டால் மறுநாள் அதுவும் கிடைக்காது. என் தங்கை ரெண்டும் சின்ன குழந்தைகள்.. காலையில் எழ நேரமாகி விட்டால் ஆயா தண்ணீர் தொட்டியில் எடுத்து போட்டு விடுவாள் அதற்காகவே நான் காலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன்.

ஆரம்பத்தில் அப்பா ஒன்றிரண்டு முறை வந்து பார்த்து விட்டு போவார். பிறகு அவர் வருவதும் இல்லை. எங்களுக்கு எந்த உறவும் இல்லை. நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அத்தை எங்களை பார்க்க வந்திருந்தாள். பார்த்தவள் அழுதுக்கொண்டே சொன்னாள் உங்க அப்பாவ பகவான் எடுத்துக்கிட்டார் என்று.

எனக்கு அழுகையே வரவில்லை. அவர் இருந்தும் என்ன பயன்? இருந்தாலும் ஒன்று தான் இறந்தாலும் ஒன்று தான். அதற்கு அடுத்த ஆண்டே நான் வயசுக்கு வந்தேன். அதிலிருந்து தான் பிரச்சனையும் வந்தது. யாருமற்ற அனாதைகளை யார் கண்டு கொள்ள போகிறார்கள்? அவர்கள் மீது வன்முறை நிகழ்த்தினாலும் கேட்க தான் யார் இருக்கிறார்கள்?

அந்த ஆசிரம நிர்வாகி அவருக்கு என் அப்பாவின் வயது தான் இருக்கும். எல்லோருமே அவரை அப்பா என்று தான் அழைப்பார்கள். ஆனால் அப்பா வேஷத்தில் அலையும் மிருகம் என்று பிறகு தான் புரிந்தது. கொஞ்ச கொஞ்சமா என்னை அங்கே தொடுவது இங்கே தொடுவது என்று போய் கொண்டிருந்த போது ஒரு நாள்..

என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை. அந்த ஆயா வந்து சொன்னார். அப்பா கூப்பிடுகிறார் என்று. அவர் அவருடைய அறையில் இருந்தார். நான் உள்ளே போனதும் கதவை கொண்டி வைத்து தாளிட்டார்.

நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன் என்றார்

என்ன?

ஆசிரமத்தில இருந்து உன்னையும் உன் தங்கைகளையும் விலக்க சொல்லி உத்தரவு வந்திருக்கு. இது உறவுகள் யாரும் இல்லாத அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லம். உனக்கு தான் உறவுகள் எல்லாம் இருக்கிறார்களே. உங்க அப்பா உங்களை யாரும் இல்லாத அனாதை என்று தான் சொல்லி இங்கே சேர்த்தார். இப்ப தான் உண்மை தெரிந்தது என்றார்.

ஸார் எங்களுக்கு யாரும் இல்ல அப்பா கூட போன வருஷம் இறந்து போய்ட்டார். சொந்தம் என்று அத்தை இருக்காங்க அவங்களும் எங்களை வந்து பாக்குறதில்ல ஸார் ப்ளிஸ் ஸார் எங்களை வெளிய அனுப்பி விடாதீங்க என்று கண் கலங்கியவாறே சொன்னேன்.

அப்படியா? அப்ப நான் சொல்றத கேட்டா நீங்க இங்க இருக்கலாம் என்றான்.

வா வந்து என் பக்கத்தில் உக்காரு.

புரிந்தும் புரியாமலும் போய் அமர்ந்தேன். அழக்கூட தெம்பில்லை. என் யோனியை கிழித்த முதல் ஆண்குறி, கிழித்தவன் அந்த அயோக்கியன் யாரிடமும் சொல்லி அழக்கூட முடியவில்லை.

அதன் பிறகு அந்த காமபிசாசின் தொல்லை இல்லை. அவனுக்கு அங்கிருக்கும் பெண் குழந்தைகள் எல்லோரையும் ஒரு முறை அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் தான் அவனுக்கு. பிளஸ்ஒன் படிக்கும் அத்தை வந்தாள் உறவு பட்டாளோத்தோடு.

குழந்தைங்க மூணு பேரையும் கூட்டிட்டு போறேன்னு சொல்லி கூட்டிக்கிட்டு போனா. காரணம் படிச்சது போதும். அவ பிள்ளைக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க.

நான் முடியாது என்று சொல்லி விட்டேன். எனக்கு ஆண், ஆண்குறி ரெண்டுமே பயமாக இருந்தது. அந்த அயோக்கியன் என்னை சிதைத்தது மனம் முழுக்க ரணமாகி இருந்தது. என் பிடிவாதத்தை பார்த்து விட்டு என் தங்கையை அத்தை அவள் பிள்ளைக்கு மணம்முடித்தாள்.

கடைசி தங்கையையும் உறவிலே ஒருவருக்கு கட்டி கொடுத்தாள் அத்தை. என்னை எக்கேடு வேணுமின்னாலும் நீ கெட்டுப்போ. அக்ரஹாரத்தில இருந்து எங்க மானத்தை வாங்காதே என்றாள் அன்று அக்ரஹாரம் விட்டு விலகி வந்தது தான் இன்று வரை அங்கே போகவில்லை.

ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய தோழிகள் மூவர் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தனர். நானும் அவர்களோடு தங்கி இருந்து கம்பெனி ஒன்றிற்கு வேலைக்கு போய் வந்தேன்.
நான்கு பெண்கள் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதை அறிந்த சில காலிபயல்கள் அடிக்கடி எங்களுக்கு தொந்தரவு கொடுப்பது வாடிக்கையாகி போனது. இரவு நேரத்தில் திடீரென்று கதவை தட்டிக்கொண்டு ஓடி போய் விடுவார்கள்.

இந்த நேரத்தில் தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். ரெளடி அவன் எங்களுக்கு இதுபோல் காலிபயல்கள் தொல்லை கொடுப்பதை அறிந்த அவன் அவர்களை ஒருநாள் அடிஅடி என்று அடித்து துவைத்து விட்டான்.

அன்று என் மனதில் விழுந்தவன் தான். அவன் மீது காதல் வந்து விட்டது. உருக உருக பேசினான். அன்பை திகட்ட திகட்ட பரிமாறி கொண்டோம். ஒருநாள் கோவில் ஒன்றில் திருமணம் பண்ணிக்கொண்டோம். அவன் குடும்பம் அப்பா இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்  அவன் நண்பன் ஒருவன் மும்பையில் இருக்கிறான் அங்கே போய் கொஞ்ச நாள் இருந்து விட்டு மீண்டும் வரலாம் என்றான்.

நம்பினேன் நம்பினேன் அவனை முழுதாக நம்பினேன். அந்த நம்பிக்கைக்கு அவன் தந்த பரிசு தான் இந்த வேசி அவதாரம். மும்பை போன புதிதில் ஒரு மாதம் நல்லா சந்தோஷமாக தான் இருந்தது. என்னை முழுக்க முழுக்க அனுபவித்தான். ஒரு நாள் யாரையோ பார்க்க வேண்டும் என்று என்னை கிரான்ட்ரோட் அழைத்து சென்றான்.

எனக்கு அப்போது தெரியாது அது பாலியல் தொழில் செய்யும் பெண்கள் இருக்கும் பகுதி என்று. அந்த இடமே புதிதாக இருந்தது. பெண்கள் சின்ன பாவாடை அல்லது மிடி ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து கொண்டு கைகளை அசைத்து அசைத்து போவோர் வருவோர் அனைவரையும் சிரித்தவாறு அழைத்து கொண்டிருந்தனர்.

ஒரு ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் மூன்றாவது தளத்திற்கு அழைத்து சென்றான். அந்த கட்டிடம் முழுவதும் ஆண்களும் பெண்களுமாக நிறைந்து இருந்தனர். ஒரு அறையில் என்னை உட்கார சொல்லி விட்டு போனான். வயதான பெண் ஒருத்தி வந்து என்னை பார்த்து விட்டு போனாள். நான் காத்திருந்தேன் காத்திருந்தேன். அவன் வரவே இல்லை.

மெல்ல மெல்ல புரிந்தது.  முரண்டு பிடித்தேன் அடித்தார்கள். வலுக்கட்டாயமாக மதுவை வாயில் ஊற்றினார்கள் போதை போதை மதுவின் போதையிலே பல நாட்கள் கிடந்தேன். எத்தனை பேர் என்னை புணர்ந்தார்களோ'' கணக்கு இல்லை ஒருவாறாக இது தான் வாழ்க்கை என்ற மனநிலைக்கு வந்த போது உடலும் மனமும் சக்கையாய் மரத்து போய் இருந்தது. உயிர் எப்போதோ தொலைந்து போய் இருந்தது. ஆன்மா அற்ற இந்த சதை பிண்டத்தை தினம் தினம் முப்பதிற்கும் மேற்பட்ட ஆண்குறிகள் துளைத்து கொண்டு இருக்கின்றன. வலிக்கவில்லை. உறக்கத்தில் கனவில்  கூட ஆண்குறிகள் தான் என்னை சுற்றி வட்டமிடுகின்றன.

உயிரும் உடலும் வேறு வேறு தானே உயிர் என்றோ துறந்து விட உடல் மட்டும் இன்னும் துடிப்பது ஏனோ? என் உடலுக்கு மரணம் வேண்டும். மரணம் வேண்டும் மரணம் வேண்டும். ஆம் மரணம் மட்டுமே வேண்டும்.

இனி ஜனித்தால் ஒரு ஆண்குறி இல்லாத ஜனனம் வேண்டும்.  தருவாயா இறைவா நீ எனக்கு அதை தருவாயா இது ஒன்று மட்டுமே இந்த வேசியின் ஆசை.!!!!!

No comments:

Post a Comment